விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி ஏன்?

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் சில ஆண்டுகளாக உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார். சமீபத்தில்கூட நீரிழிவு நோய் காரணமாக அவரது கால் விரல்கள் எடுக்கப்பட்டன. இதனையடுத்து மருத்துவமனையில் ஓய்வில் இருந்த அவர் சமீபத்தில் வீடு திரும்பினார்.

அப்போது தனது உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இருப்பினும் அவரது உடல்நிலை குறித்து ஏகப்பட்ட தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாமென்று தேமுதிக சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைமைக் கழகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தனியார் தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் தொடர்ந்து தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

ஏற்கெனவே விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தேமுதிக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் இதுபோன்ற பொய்யான செய்திகள் வெளியிடுவதை தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

விஜயகாந்த் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் யாரும் நம்ப வேண்டாம்.

அடுத்தவரின் உடல்நிலை குறித்து தவறான செய்தியை பரப்பி அதன்மூலம் ஆதாயம் தேடும் ஈனத்தனமான செயல்களை இன்றுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அனைவருக்கும் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படுவது சகஜம்தான். ஆனால், சொந்த ஆதாயத்திற்காக முற்றிலும் தவறான செய்திகளை தொடர்ந்து பரப்பி வருவது வருந்தத்தக்க விஷயம்.

இனி இதுபோன்ற கீழ்த்தரமான விஷமத்தனமான அனைவரையும் குழப்பும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். விஜயகாந்த் உடல்நிலை குறித்து தலைமைக் கழகம் வெளியிடும் அறிக்கையே உண்மையானது, இறுதியானது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like