90 % பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது!

இந்தியாவில் கொரோனா பரவல் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, நாட்டில் 16,135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 35 லட்சத்து 18 ஆயிரத்து 564 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 864 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட 90 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுவிட்டதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 198 கோடியை கடந்துள்ளது.

நேற்று ஒரேநாளில் 10 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. இது மிகவும் சிறப்பான சாதனை என்றும் நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் நாம் ஒன்றிணைந்து வெற்றிபெறுவோம்” என பதிவிட்டுள்ளார்.

You might also like