பெண் குழந்தையை யாருடைய பாதுகாப்பில் விட்டுச் செல்வது?

பெண்குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில் அவர்களைப் பேணி காப்பது குறித்து குழந்தைகள் பாதுகாப்புக்குழு அதிகாரி பாண்டியராஜன் விளக்கமளித்துள்ளார்.

அந்த விளக்கத்தில், “தற்போது பொருளாதாரத்தை மையப்படுத்தித்தான் நமது வாழ்க்கை நகருகிறது. கிராம, நகரங்களில் வசிக்கும் நடுத்தர, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் செல்வது கட்டாயம்.

எனவே, குழந்தைகளை வளர்ப்பதில் முழுநேரத்தையும் செலவிட அவர்களால் முடிவதில்லை. இதனாலும் குழந்தைகள் தங்கள் விருப்பம்போல இருக்கவும், அடுத்தவர்களின் சீண்டல்களுக்கு ஆளாகவும் நேரிடுகிறது.

இணையதளம், சமூகவலைதளங்களில் வரும் ஆபத்து நிறைந்த நிகழ்ச்சிகள், தவறான பாதைக்குள் தள்ளும் தகவல்கள், இளைய சமுதாயத்தின் உணர்வுகளை தூண்டும் வகையில் காட்சிப்படுத்தப்படுகின்றன. வாட்ஸ்அப், பேஸ்புக்கில் வரும் அபாய தகவல்கள் எளிதாக மாணவிகளின் மனதுக்குள்ளும் ஊடுருவி பாழ்படுத்துகின்றன.

குறிப்பாக இன்ஸ்டாகிராம் மூலம் பேசிப்பழகினால் அதை காவல்துறையினர் கண்டுபிடிப்பது கடினமானது. இதில் பழகிய 14 வயது சிறுமியும், 19 வயது இளைஞரும் சென்னைக்குச் சென்றனர்.

அங்கு ஒருவரிடம் சிக்கிய சிறுமி, பலாத்காரத்திற்கு ஆளான சம்பவம் வெளிவந்துள்ளது. இதற்கு யார் காரணம்? சிறுமியின் அறியாமை என்பதா அல்லது சமூகவலைதள மோகம் என்பதா?

பல்வேறு பாலியல் சம்பவங்களில் சிக்கும் மாணவிகளுக்கு கவுன்சிலிங் அளிக்கிறோம். அவ்வாறான நேரங்களில் அவர்களுடன் உரையாடும்போது, தங்களிடம் பழகியவர்களை அவர்கள் விட்டுக் கொடுப்பதே இல்லை.

இதற்கு அவர்களின் வீட்டில் உள்ளவர்கள், இதுபோன்ற நிலையில் இருக்கும் மாணவிகளிடம் போதிய அன்பு காட்டுவதில்லை என்ற காரணத்தை அறிய முடிகிறது.

எனவே பெற்றோர், தங்களின் பிள்ளைகளிடம் இணக்கமாக இருந்தால்தான், இதுபோன்ற தவறுகள் தவிர்க்கப்படும்.

பள்ளிகளில் முன்பைப்போல மாணவர்களைக் கண்டிக்க முடிவதில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

மாணவ-மாணவிகள் பாலியல் பிரச்சினைகளில் சிக்கினால், மீண்டும் அந்தப் பள்ளியில் அவர்களுக்கு இடம் கொடுப்பதில்லை. உடனடியாக நீக்கப்படுகின்றனர்.

தெரிந்தோ, தெரியாமலோ இதுபோன்ற சம்பவங்களில் சிக்கிய அவர்களை அந்தப் பள்ளியே நிராகரித்தால் அவர்கள் எங்கே போவார்கள்?

இளம் சமுதாயத்தினருக்கு சரியான வழியை காட்ட வேண்டுமானால் பெற்றோர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்பம் என அனைத்தையும் மாற்றுப்பாதைக்கு கொண்டு செல்வது அவசியம்.

முன்பெல்லாம் பள்ளிகளில் நீதி போதனைகளை பாடங்களில் சொல்லித்தருவார்கள். அதை கேட்கும் மாணவர்களின் மனம் சரியான திசையில் செல்லும். ஆனால் தற்போதைய பாடங்கள் அப்படி இல்லை.

அடிப்படையில் ஒருவன் நல்ஒழுக்க சிந்தனைகளை உடையவனாக இருந்தால்தான் அவனின் செயல்பாடுகளும் சிறப்பானவையாக அமையும்.

ஒழுக்கத்தையும், நல்ல சிந்தனைகளையும் இளைய சமுதாயத்திற்கு கற்றுத் தருவதற்கான கோட்பாடுகளை செயல்படுத்துவது அரசின் கடமை. இதை பள்ளிகளின் வாயிலாகத்தான் நிறைவேற்ற முடியும்” என்கிறார் விளக்கமாக.

– நன்றி: மாலை மலர்

You might also like