நீங்கள் உங்களை நம்பினால் போதும்!

தினேஷ் கார்த்திக் உருக்கம்!

ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடக்கிறது. ஜூன் 9-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை இந்த போட்டிகள் இந்தியாவில் நடைபெறுகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்த அணிக்கு திரும்பியுள்ளார்.

இந்திய அணியின் முக்கியமான வெற்றிகளில் இவர் சிறந்த பங்களிப்பை வழங்கி இருந்தாலும் இந்திய அணியில் இவருக்கான இடம் கடந்த சில வருடங்களாக கேள்விக்குறியாகி இருந்தது.

தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் கடந்த 2019 -ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் போது வர்ணனையாளராக செயல்பட்டார்.

அதன் பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதற்காக கடினமாக உழைத்த இவர் நடப்பு ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

இந்திய அணிக்கு தேர்வாகியது குறித்து தினேஷ் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “உங்களை நீங்கள் நம்பினால், எல்லாம் சரியாகிவிடும். அனைவரின் ஆதரவுக்கும் நம்பிக்கைக்கும் நன்றி. கடின உழைப்பு தொடரும்” என தெரிவித்துள்ளார்.

தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு திரும்பியுள்ளதை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவருக்கு தொடர்ந்து வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

You might also like