இந்தியாவின் முதல் அஞ்சல் தலை வெளியிடப்பட்ட தினம்!

இந்தியாவின் முதல் அஞ்சல் தலை வெளியிடப்பட்ட தினம் இன்று (1854, மே-6).

மக்களின் குடும்ப உறவுகளுக்கிடையிலான தொடர்பு, அலுவல் உள்ளிட்ட தகவல்களைக் குறைவான செலவில் சுமந்து செல்லும் முக்கியப் பணியினை இந்திய அஞ்சல்துறை செய்து வருகின்றது.

ஆனால் இன்று இ–மெயில், எஸ்.எம்.எஸ், வாட்ஸ் அப், பேஸ்புக் என்பது போன்ற விஞ்ஞான வளர்ச்சியால் கடிதப் போக்குவரத்து காலாவதியாகும் நிலையை அடைந்துள்ளது.

இந்தத் தொகுப்பில் இந்திய அஞ்சல் துறையின் தலைகள் (stamp) பற்றி பார்க்கலாம்.

இந்திய அஞ்சல் துறையின் தலைகள் (stamp) மாவட்டத்திற்கேற்ப மாறுபடுகிறது. அதேபோல் ஒரு இடத்தில் இருந்து, இன்னொரு இடத்திற்கு கடிதம் சென்று சேர்ந்ததும், அந்த ஊரில் உள்ள அஞ்சலகத்தின் மூலம் அந்த தபால் வந்து சேர்ந்ததற்கான முத்திரை குத்தப்படும்.

அதேபோல் தபால் அனுப்பப்பட்ட இடத்திலும் ஒரு முத்திரை குத்தப்படும். இந்த முத்திரை இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களில் உள்ள, அனைத்து அஞ்சலகங்களிலுமே குத்தப்பட்டாலும் அதிலும் ஒரு சிறப்புத்தன்மை உண்டு.

உதாரணமாக கன்னியாகுமரி அஞ்சல் நிலையத்தில் விவேகானந்தர் நினைவிடம், மகாபலிபுரத்தில் சிற்பங்கள் என அந்தந்த ஊர்களின் அடையாளத்தைத் தாங்கி முத்திரை இடம் பெற்றிருக்கும்.

இந்தியா முழுமைக்கும் சேர்த்து 200-க்கும் மேற்பட்ட அஞ்சலகங்களில் இந்த தனித்த முத்திரைகள் உண்டு.

இந்தியாவில் கடந்த 1854 மே 6-ல், ஸ்டாம்ப் எனப்படும் தபால் தலை வெளியிடப்பட்டது.தபால் தலைகள் முக்கோணம், வட்டம் என பல்வேறு வடிவங்களில் உள்ளன.

இதில், படம், நாட்டின் பெயர் முதலியன இடம் பெற்றிருக்கும். ஒருவர் அனுப்பும் தபாலின், கடித உறையில் தபால் தலைகளை ஒட்டி அனுப்புவர்.

தபால் தலைகளை அச்சிடும் போது, அதன் நீள அகலத்தைக் கருத்தில் கொண்டு 100 அல்லது 150 தபால் தலைகள் கொண்ட ஒரு தாளாக அச்சிடுகிறார்கள்.

சேகரிப்பிற்கான தபால் தலைகளை சில தபால் தலைகள் அடங்கிய ஒரு சிறிய தாளாகவும் அச்சிடுவார்கள். இதனை குறுந்தாள் தபால் தலைகள் என்கிறார்கள்.

இந்த தபால் தலைகளை தனியாகப் பிரித்தெடுத்தோ அல்லது முழுத்தாளையுமோ தபால் உறையின் மீது ஒட்டி கடிதப் போக்குவரத்துக்கு பயன்படுத்தலாம். ஆனால் சேகரிப்பிற்கான குறைந்த எண்ணிக்கையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த தபால் தலைகளை யாரும் பயன்படுத்துவதில்லை.

முதன்முதலில் தபால் தலை கண்காட்சி கொல்கத்தாவில் நடந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1947–ம் ஆண்டு ஜூலை 22–ம் தேதி இந்திய அரசியல் அமைப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசியக் கொடி பொறித்த அஞ்சல் தலை ‘ஜெய்ஹிந்த்’ என்ற தலைப்பில் 1947 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்தியாவின் தேசப் பிதாவாக போற்றப்படும் மகாத்மா காந்தியை கவுரவிக்கும் வகையில் இந்திய அஞ்சல் துறை இதுவரை 35–க்கும் மேற்பட்ட அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் காந்தியடிகளின் புகழைப் பறைசாற்ற அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளன.

You might also like