குடும்பத்திற்காக காமராசர் சேர்த்து வைத்த சொத்து?!

தமிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம்.

காமராஜரின் தாயார் உடல்நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது. உடனே மதுரைக்கு சென்று அங்கிருந்து நெடுமாறனுடன் காரில் விருதுநகருக்கு சென்றார் காமராஜர்.

வீட்டிற்குள் நுழைந்ததும், படுக்கையில் இருந்த காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள், கண் விழித்து பார்த்தார்.

மகனைப் பார்த்ததும் நெகிழ்ந்து கண்ணீர் விட்டார்.

அருகில் உட்கார்ந்த காமராஜர் அம்மாவிடமும், சகோதரியிடமும் விசாரித்து விட்டு கிளம்பினார்.

”அப்போ… நான் வர்றேன்.. உடம்பை நல்லாப் பார்த்துக்க” என்று கிளம்பிய போது, உலர்ந்த குரலில் சிவகாமி அம்மாள் சொன்னார்.

 ”ஒரு வாய் சாப்பிட்டுட்டு போ”

”வேண்டாம்மா” – என்று முதலில் மறுத்தவர், ”சரி… சரி.. எடுத்து வைங்க” என கூறி, அடுக்களைக்குள் சென்று தரையில் உட்கார்ந்தார்.

அவருடைய சகோதரியின் மகள்கள் உணவு பரிமாறினார்கள்.

அவசரமாய்ச் சாப்பிட்டு விட்டு, அம்மாவைப் பார்த்து கைகூப்பினார் காமராஜர்.

”அப்போ நான் வரட்டுமா..?”

சொந்த வீட்டில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு தாயாரின் இறுதிக்காலத்தில் காமராஜர் சாப்பிட்டதாக இது குறித்து எழுதியிருந்தார் எழுத்தாளர் சாவி.

”மரணத்தின் போது இன்னொருவர் பணம் கொடுக்கிறார். பல்லக்கு கட்டுகிறவர் இலவசமாக கட்டித் தருகிறார். வந்தவர்களுக்கு ஒரு வேளை சோறு போட இடமும் இல்லை. பணமும் இல்லை. பத்து வருஷம் ராஜாங்கம் நடத்தினான் மகன்..! பெற்ற தாய் வாழ்ந்த கதை இப்படி!”

– என்று காமராஜரின் தாய் சிவகாமி அம்மாள் மறைந்தபோது எழுதினார் கவிஞர் கண்ணதாசன்.

விருதுநகரில் காமராஜர் வாழ்ந்த அந்த எளிய வீட்டை, இந்திரா காந்தியிலிருந்து லால்பகதூர் சாஸ்திரி வரை, பலரும் வந்திருக்கிற வீட்டை, பிறகு அரசுடமை ஆக்கியிருந்தார்கள்.

குமுதத்தில் எழுதுவதற்காக 95-ல் விருதுநகரில் உள்ள காமராஜரின் வீட்டுக்கு போயிருந்தேன்.

அருகில் இன்னொரு வாடகை வீட்டில், காமராஜரின் தங்கை நாகம்மாளின் மகளான கமலாதேவி வசிப்பதாக சொன்னதும், அங்கு போனேன்.

மிக எளிய வீடு.

காமராஜர் மறைந்த பிறகு, பாரத ரத்னா கொடுக்கப்பட்ட போது, அதைப் பெற்று கொண்டவர்கள் நாகம்மாள் குடும்பத்தினர் தான்.

அறுபத்து மூன்று வயதான, காமராஜரின் மருமகளான கமலாதேவி வறுமையில் ஒடுங்கி போயிருந்தார்.

கணவர் இறந்துவிட, அவருடைய மகன்கள் தீப்பெட்டி ஆபிஸில் ஐநூறு ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மிகக் குறைந்த வருமானம், குடும்பத்தைத் தவிக்க வைத்திருந்தது.

”நாங்க ஏழு பேர் இருக்கோம். சாப்பிடவே கஷ்டமா இருக்குப்பா. கஷ்டம் தாங்காம கலெக்டர் காலில் கூட விழுந்து, அழுது கூட கேட்டு பார்த்துட்டேன். எந்த வேலையும் கிடைக்கலைப்பா…”

– எதிரில் இருந்த நாகம்மாளின் குரல் ஏறி இறங்கியது. பெருமூச்சு விட்டார்.

“இப்போ பக்கத்து வீடுகளில் வேலை செய்றேன்.. கூட்டுறேன்.. இந்தா இருக்கு.. பாருப்பா (பக்கத்தில் இருக்கும் காமராஜரின் வீட்டை சுட்டிக் காட்டுகிறார்.)

எங்க மாமா வீட்டிலே, பெருக்கிற வேலையாவது வாங்கிக் கொடுக்க சொல்லுப்பா.. உனக்கு புண்ணியமா இருக்கும்..

அங்கே கூட்டினாலாவது கையில் ஐம்பதோ, நூறோ கூலியா கிடைக்குமில்லைப்பா.. நான் அங்கே போய் பெருக்கினா, அவமானம்னு சொல்றாங்க.. நம்ம நிலைமை இப்படி இருக்கிறப்போ எங்க மாமா வீட்டை கூட்டிப் பெருக்கிறதில என்ன அவமானம் இருக்குப்பா..” –

சொன்னபடி கசிந்து அழுதார், ஒரு முதல்வராக இருந்தவரின் மருமகள். சேலை முந்தானையால் முகத்தை துடைத்துக் கொண்டார்.

”மாமா இருக்கிற வரை அவருக்கும் சேர்த்துக்கலை.. குடும்பத்துக்கும் சேர்த்துக்கலை.. இப்போ பாருப்பா.. விதவை பென்ஷனுக்கு மனுப் போடுற நிலைமையிலே இருக்கேன்”

– சொல்லும் போது கைகூப்பின காட்சி, முள்ளாய் உறுத்தியது.

அடுத்த வாரம் 96, மே மாதத்தில் குமுதத்தில் ”வீட்டுவேலை செய்யும் காமராஜரின் மருமகள்” என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை வெளிவந்தது.

வெளிவந்த மறுவாரத்தில் ஆச்சர்யமானதொரு மாற்றம்!

முதல்வர் ஜெயலலிதா, காமராஜரின் குடும்பத்திற்கு வீடும், வேலை வாய்ப்பும், வங்கியில் 11 லட்சம் ரூபாய் டெபாசிட்டும் பண்ணுவதாக அறிவிப்பு வெளியானது.

அந்த தகவலை சொல்ல மறுபடியும் விருதுநகரில் உள்ள கமலாதேவி வீட்டுக்கு போனபோது, அந்த அம்மையார் நெருங்கி வந்து கையைப் பிடித்துக் கொண்டார்.

கண்கள் ததும்பின.

கனிந்த பார்வையில் நன்றி சொன்னார் கமலாதேவி அம்மாள் என்று எழுத்தாளர் மணா அவர்கள் எழுதியுள்ளார்.

இப்படியும் ஒரு மனிதர் தமிழகத்தில் முதல்வராக இருந்துள்ளார் என்பது தமிழுக்கு, தமிழகத்துக்கு பெருமை தான்.

– நன்றி: பால முரளிதரன்

You might also like