‘நோபல் பரிசுகள்’ பெற்ற பெருமைக்குரிய குடும்பம்!

பிரான்சில் பிறந்த இயற்பியல் விஞ்ஞானி பியேர் கியூரி. இவருக்கு வீட்டிலேயே இளமைக் கல்வி தொடங்கப்பட்டது.

தனது 14-ம் வயதிலேயே இவருடைய கணித ஆர்வம் வெளிப்பட்டது. 16 வயதில் பல்கலைக் கழகப் படிப்பிற்காக நுழைந்தார். 18 வயதில் அமெரிக்காவில் முதுகலைக்கு நிகரான பட்டத்தைப் பெற்றார்.

ஆனால் பண வசதி இல்லாத காரணத்தால் அப்பட்டத்திற்குரிய தகுதியான பணிகளைச் செய்ய இயலவில்லை. மிகுந்த தாழ்ந்த ஊதியம் பெற்ற ஆய்வக உதவியாளராக மட்டுமே இவரால் பணியில் அமர முடிந்தது.

ஜேக்குவிஸ் என்ற இவரது அண்ணனுடன் இணைந்து முதல் முக்கியமான அறிவியல் ஆய்வில் இவர் ஈடுபட்டார். அப்போது பியேரின் வயது 21. அண்ணனின் வயது 24. இருவரும் சேர்ந்து அழுத்த மின் விளைவினைக் கண்டுபிடித்தனர்.

அதாவது சில படிகங்களில் அழுத்தத்தைச் செலுத்தும் போது அவை மின்னழுத்தத்தை வெளிப்படுத்தின. மாறாக அவற்றை மின் புலத்தில் வைத்தால் அப்படிகங்கள் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன.

இந்த இரு செயல்களுக்கும் உள்ள ஒரே தன்மையுள்ள அடிப்படைப் பண்புகள் இயற்பியல் விதிகளை மேம்படுத்த உதவின. அழுத்த மின்விளைவுத் தத்துவத்தைக் கண்டறிந்ததும் கியூரி சகோதரர்கள் பியூசோ மின் குவார்ட்சு மின்னோட்டமானியை உருவாக்கினர்.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இக்கருவி மேரி கியூரியின் ஆரம்ப கால ஆய்வுகளுக்குப் பயன்பட்டது. பிறகு மைக்ரோபோன், குவார்ட்சு கடிகாரஙக்ள், மின்கருவிகள் பலவற்றிலும் இத்தத்துவம் பயன்பட்டது.

முனைவர் பட்டம் பெறுவதற்கு முன் காந்தக் குணங்களைக் கண்டுபிடிப்பதற்காக இவர் ‘முறுக்குத் தராசு’ ஒன்றை உருவாக்கினார்.

காந்தத்தால் தீவிரமாகப் பாதிக்கப்படும், ஓரளவு பாதிக்கப்படும், பாதிக்கப்படாத பொருள்கள் பற்றிய ஆய்வுகள் இவருடைய முனைவர் பட்டத்திற்கு இவரால் எடுத்துக் கொள்ளப்பட்டன.

பாரா காந்தப் பொருள்கள் வெப்பத்தால் அடையும் மாற்றம் பற்றி இவரால் கண்டு பிடிக்கப்பட்ட விதிமுறை தான் இன்று ‘கியூரி விதி’ என்று அழைக்கப்படுகிறது.

மாறுநிலை வெப்பநிலை அதிகமாகும்போது இரும்புக் காந்தப் பொருள்கள் தங்களுடைய காந்தத் தன்மையை இழந்துவிடும் என்பதையும் இவர் கண்டறிந்தார். இந்த வெப்ப நிலைதான் ‘கியூரி புள்ளி’ எனப்படுகிறது.

1895-ல் சில ஆய்வுகளுக்காக மேரி கியூரி இவரைச் சந்தித்தபோது ஏற்பட்ட தொடர்பில் அவரைத் திருமணம் செய்துகொண்டார்.

துணைவியார் மேரி கியூரியுடன் இணைந்து பொலோனியம், ரேடியம் முதலிய தனிமங்களைத் தனிமைப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இருவரும் “கதிரியக்கம்” (Radioactivity) என்ற சொல்லை முதலில் பயன்படுத்தினர். அது தொடர்பான ஆய்விலும் சிறந்து விளங்கினர்.

மேரியின் முனைவர் பட்டத்திற்குரிய ஆய்வுகளுக்கு பியேர் கியூரியால் வடிவமைக்கப்பட்ட ‘படிக மின் அழுத்தமானி’ மிகவும் பயன்பட்டது.

பியேரியும் அவருடைய மாணவர் ஒருவரும் சேர்ந்து ரேடியம் துகள்களிலிருந்து வெளிவரும் வெப்ப ஆற்றலை உணர்ந்ததன் மூலம் அணுக்கரு ஆற்றல் குறித்த முதல் கண்டுபிடிப்பை வெளியிட்டனர்.

கதிரியக்கத் தன்மையுடைய பொருள்களிலிருந்து கதிரியக்கம் வெளியேறுவதையும் முதலில் கண்டுபிடித்தனர்.

காந்தப் புலங்களைப் பயன்படுத்தி இவ்வாறு வெளியேறிய துகள்களில் சில நேர் மின்தன்மை உடையன என்றும், சில எதிர்மின்தன்மை உடையன என்றும், சில நடுநிலை மின்தன்மை உடையன என்றும் கண்டறிந்தனர், இவையே ஆல்பாக் கதிர்கள், பீட்டாக் கதிர்கள், காமாக் கதிர்கள் எனப்பட்டன.

கதிரியக்கத்தை அளக்கப் பயன்படும் அலகு கியூரி என்ப்படும். ஒரு கியூரி என்பது நொடிக்கு 3.7×1010 சிதைவுகளை ஏற்படுத்தும் என்பது கணக்கீடு. 1910-ல் கதிரியக்கத் துறை காங்கிரஸ் என்ற அமைப்பு பியர் கியூரியைப் பெருமைப் படுத்த, கதிரியக்கத்தை அளக்க இந்த அலகை அறிமுகப்படுத்தியது.

பியேர் கியூரி – மேரி கியூரி இணையர் நோபல் பரிசு பெற்றவர்கள். இவர்களின் மூத்த மகளான ஐரீன் ஜோலியட் கியூரி, விஞ்ஞானியான ஃபிரெடரிக் ஜோலியட் என்பவரை மணந்து கொண்டார்.

இவர்கள் இருவரும் இணைந்து கதிரியக்கம் பற்றி தொடந்து ஆய்வுகள் செய்து செயற்கை முறையில் கதிரியக்கத்தை உண்டாக்கும் வழியொன்றைக் கண்டு பிடித்தனர்.

இதற்காக 1935-ல் ஐரின் கியூரிக்கும் அவரது கணவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவருடைய இரண்டாவது மகள் ஈவ் கியூரி சிறந்த இசைக் கலைஞராகவும், எழுத்தாளராகவும் புகழ் பெற்றார்.

இவர் தனது தாயார் மேரி கியூரியின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிட்டார்.

1906 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் நாள் பாரிசில், புயலுடன் கூடிய கடுமையான மழை பெய்து கொண்டிருந்த போது ரியூடௌபைன் என்ற இடத்தில் சாலையின் குறுக்கே இவர் கடக்கும் போது பெரிய சரக்கு வண்டி ஒன்று இவரை மோதிக் கீழே தள்ளியதால் இவர் மரணம் அடைந்தார்.

கியூரி தம்பதியரைப் பெருமைப்படுத்தும் விதமாக பல அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.

– நன்றி: பெரணமல்லூர் சேகரன் முகநூல் பதிவு

You might also like