பொதுப் பணத்தை நெருப்பா நினைக்கணும்!

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான பெருந்தலைவர் காமராஜர் 1954-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

நேர்மைக்கு பெயர் பெற்றவராக விளங்கிய காமராஜர், 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்த காலத்தில் மிகவும் எளிமையாக வாழ்ந்தார்.

ஒரு சமயம் கார் பழுது பட்டதால், டாக்சியில் ஏறி கட்சி அலுவலகத்துக்கு வந்தார் காமராஜர்.

டாக்சிக்கு பணம் கொடுத்து அனுப்பும்படி உதவியாளரிடம் கூறி விட்டு, தன் அலுவல்களைப் பார்க்க ஆரம்பித்தார். உதவியாளர் டாக்சி டிரைவரிடம் பணத்தைக் கொடுத்து இரசீது பெற்றுக் கொண்டார்.

அன்றைய வரவு செலவினைச் சரிபார்த்த காமராஜர், டாக்சிக்கு கொடுத்த பணம் அதிகம் என உணர்ந்து உதவியாளரைச் சாடினார்.

“டாக்சி மீட்டர் எவ்வளவு ரூபாய் காட்டியது என்று பார்த்தாயா?” – என்றார் காமராஜர்.

“டாக்சி டிரைவர் கேட்ட பணத்தைக் கொடுத்தேன் ஐயா.” – என்றார் உதவியாளர்.

“நீ மீட்டரைப் பார்த்து, அதன் படிதானே பணம் தர வேண்டும்? மீட்டரைப் பார்க்காமல், டாக்சி டிரைவர் கேட்ட ரூபாயை நீ கொடுக்கலாமா? இது பொதுப்பணம் இல்லையா?

அஞ்சு ரூபாய், பத்து ரூபாய்ன்னு, பொது மக்கள் கிட்ட வசூலிச்ச பணத்தை நாம நெருப்பு மாதிரிக் கையாளணும். சிக்கனமாகச் செலவழிக்கணும். கட்சிப் பணத்தை, காமராஜர் தன் இஷ்டத்துக்குச் செலவு பண்ணி, வீணாக்கிட்டார்னு குற்றச்சாட்டு வரக் கூடாது,” எனக் கூறியுள்ளார்.

அதுதான் காமராஜர்.

You might also like