மனிதனின் அடையாளம் அன்புதான்!

– வேதாத்திரி மகரிஷி வாழ்ந்து உணர்த்திய மணிமொழிகள்

தவறு செய்யப்பட்ட கையோடு புத்தி சொல்லக் கூடாது. குத்திக் காட்டுவது போல அறிவுரை இருக்கக் கூடாது.

மனம் ஒரு நிரந்தரமான பொருள் இல்லை. தொடர்ந்து வந்து கொண்டே இருக்கக்கூடிய ஒரு இயக்கம் அது.

தடுமாற்றம், சினம், கவலை, பேராசை நான்கும் வாழ்க்கைக்கு நன்மை தரும் வழிகளை அடைத்து விடுகின்றன.

ஆசையின் இயல்பறிந்து அதை நலமே விளைவிக்கத் தக்க வகையில் பயன்படுத்தி ஒழுங்குபடுத்தி விட்டால் அதுவே ஞானமாகவும் வளரும்.

மனிதன் என்பதற்கு அடையாளம் அவனிடமுள்ள அன்புதான்.

உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும். எண்ணும் எண்ணங்கள் எங்கும் பாயும்.

எண்ணமே எக்காலத்திலும் வாழ்க்கையின் சிற்பி; எண்ணிட எண்ணிட இனிதே பயக்கும்.

கடமையை உணர்ந்திடு; காலத்தில் செய்திடு; உடம்புக்கும் நல்லது; உள்ளமும் அமைதியாகும்.

ஆக்கமும் அழிவும் அணுக்கள் கூடுதல் பிரிதலே. நீக்கமற நிறைந்தவனின் நினைக்கும் ரசிக்கும் நிலை அறிவு.

இயற்கையை அறிந்து அதனோடு இணைந்து எண்ணுபவர் எண்ணம் எப்போதும் எவ்விடத்தும் கவலையாய் மாறாது.

விருப்பத்தை ஒழிக்க வேண்டாம். வெறுப்பை அழித்தால் அதுவே மேன்மைக்கு வழிவகுக்கும்.

வாழ்வில் மனத்தூய்மை, ஒழுங்கான உணவு முறை, அளவான உழைப்பு, ஓய்வு இவற்றை முறையாகக் கடைபிடித்தால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

உண்மை எது. பொய் எது என்று விசாரிக்காமல், இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.

நமது வாழ்வைச் சீரமைக்கும் அற்புத சிற்பி அவரவர் எண்ணங்களே.

எண்ணத்தை ஆராய்ச்சியிலும் தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன், மகான், ஞானி.

உணர்ச்சிகளில் மயங்காமல் வாழும் தெளிவு நிலையே விழிப்புநிலை ஆகும்.

அளவோடு உணவு உண்டால், உடல் உணவை சீரணிக்கும். அதிகமாக உண்டால், உணவு உடலைச் சீரணிக்கும்.

துன்பத்தையே நினைப்பதும், குறைவையே நினைப்பதும் ஒரு ஏழ்மை; அறிவின் வறுமையேயாம்

அகந்தை_ உறவுகளை முறிக்கும். அன்பு_ உறவுகளை வளர்க்கும்.

உண்மையில் எதிரி உனக்கு உண்டு எனில் உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே.

இன்பமும் இல்லை துன்பமும் இல்லை என்றால் அதுதான் அமைதி.

விடாமுயற்சியும், பகுத்தறிவும், கடின உழைப்பும் உள்ளவனுக்கு அப்பாற்பட்டது எதுமில்லை.

பல நதிகள் பல பெயர்களில் வெவ்வேறு திசைகளில் பயணிக்கிறது. போகும் பாதை வேறு என்றாலும்….! சேரும் இடம் ஒன்று தானே..!

பிறரை ஏமாற்றாமல் வாழ்பவன் ஒரு நல்ல மனிதன். பிறரிடம் ஏமாறாமல் வாழ்பவன் ஒரு அறிவாளி. பிறர் ஏமாற்றுகின்றார்கள் எனத் தெளிவாக உணர்ந்தும் அதை தெரிந்து கொள்ளாததுபோல் நடித்து இயன்ற அளவிலும் பாதகமில்லாத முறையிலும் விட்டுக்கொடுத்து இருவரும் நலம்பெறக் காண்பவன் ஒரு பெருந்தகை.

அன்புள்ளவர்களிடம்தான் பிடிவாதம் இருக்காது. பெருந்தன்மை இருக்கும். ஆற்றலை உற்பத்தி பண்ணுகிறவர்கள் அவர்கள்தாம்.

அமைதியான குடும்பமே நல்ல குடும்பம். குடும்ப அமைதியே உலக அமைதிக்கு வித்தாகும்.

You might also like