உண்மை என்பது குழந்தை போல!

மொழியை வலையாக மாற்றி
வீசிப் பிடிக்க முயன்றபோது
கிழித்துக்கொண்டு
வெளியே ஓடிற்று உண்மை
பிடிக்கப் பின்னால் பாய்ந்தேன்
பலன் இல்லை
மூச்சுத் திணறி
சோர்ந்து சரிந்தேன்
பின் ஏதேதோ யோசனைகள்
தூக்கம்
கண் விழித்ததும்
குழந்தைபோல்
மார்பில் அமர்ந்திருந்தது உண்மை
மௌனம் பிடிக்கும் என்றது
யோசனை பிடிக்கும் என்றது
அதிகம் பிடிப்பது
அன்புதான்
என்று சொல்லிச் சிரித்தது.

– 1994-ல் உன்னதம் என்ற இதழில் சுந்தர ராமசாமி எழுதிய கவிதை

You might also like