கணினியில் வேலை செய்பவர்களுக்கு எடை அதிகரிப்பது ஏன்?

கணினி முன்பாக வேலை செய்வதால் எடை அதிகரிப்பை உணர்கிறீர்களா? அப்ப இத டிரை பண்ணுங்க!

உடற்பயிற்சி, சரியான நேரத்தில் உணவு உட்கொள்வது, அதிக தண்ணீர் அருந்துவது போன்ற பல்வேறு வழிமுறைகளை உங்களது வாழ்வில் கடைப்பிடித்து வந்தாலே உடல் எடையை எளிதில் குறைக்க முடியும்.

இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் உடல் ஆரோக்கியத்துடன், உடலைக் கட்டுக்குள் வைத்திருக்க முயல்கிறார்கள். ஆனால் இது மிகப்பெரிய சவாலாகவே உள்ளது.

குறிப்பாக மாறிவரும் உணவுப்பழக்கங்கள், அதிக உடல் உழைப்பின்மை, முறையான உடற்பயிற்சி இல்லாதது போன்ற பல காரணங்களால் உடல் எடை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதிலும் இந்த ஊடரங்கு காலக்கட்டத்தில் பலர் வீட்டில் இருந்தே கணினி முன்பாக அமர்ந்து பணிபுரிந்து வருவதாலும் உடல் எடை அதிகரிப்பை உணர்கிறார்கள். ஆனால் என்ன செய்வது? அதிகரித்த எடையைக் குறைக்க முடியவில்லை என்ற கவலை மட்டும் தான் உள்ளது.

அதிலும் வீட்டிலிருந்து வேலைப்பார்ப்பதால், எந்த நேரமும் பணியாற்றக்கூடிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதனால் அவர்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

இனிவரும் காலங்களில் உங்களது உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்வதற்குத் தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது கட்டாயம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதோடு மட்டுமின்றி உடல் பருமனைக் குறைக்க சில நடைமுறைகளையும் உங்களது வாழ்வில் பின்பற்ற வேண்டும் என கூறப்படும் நிலையில் அவை என்ன என்பது நாமும் இங்கே தெரிந்துக்கொள்வோம்.

சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ளுதல்:

இன்றைய சூழலில் ஒருவரின் பணி நேரம் என்பது 8 மணி நேரத்திற்கு மேலாக உள்ளது. சிலருக்கு 24 மணி நேரமும் ஏதாவது ஒரு வேலையைப் பார்க்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இதனால் சரியான நேரத்தில் சாப்பிடும் பழக்கம் யாருக்குமே இல்லை. நீங்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால், உங்களது உணவு உட்கொள்ளும் நேரத்தை மாற்றிக்கொள்ளவது அவசியமான ஒன்று.

குறிப்பாக இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும். அதாவது 8 மணிக்கு பிறகு இரவு உணவு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அது போல காலை நேர டிபனை 8 மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

காலை உணவு தவிர்க்கக்கூடாது:

பரபரப்பாக அலுவலகம், கல்லூரிகள், பள்ளி மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்பவர்களில் பெரும்பாலோனார் காலை உணவை முறையாக எடுத்துக் கொள்வதில்லை.

இது தவறான ஒன்று. காலை நேரத்தில் 8 மணிக்குள் ஏதாவது ஒன்றைச் சாப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

இதனை ஸ்கிப் செய்யும் பட்சத்தில் உடல் நலப் பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் கலோரிகள் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளக் கூடாது.

மேலும் உடல் எடையைக் குறைக்க விரும்பும் நபர்கள், அதிகளவில் தண்ணீர் அருந்த வேண்டும். இதோடு சில சமயங்களில் ஜூஸ் போன்றவற்றையும் பருகலாம்.

உடற்பயிற்சி செய்தல்:

உடற்பயிற்சியா? அப்படின்னு கேட்கும் அளவிற்கு மக்களிடம் மறந்துப்போன ஒன்றாகி விட்டது. ஆம் முறையாக ஜிம்களுக்கு சென்றவர்கள் கூட கொரோனா காலக் கட்டத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை.

எனவே ஜிம்களுக்கு தான் செல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை. உடல் ஆரோக்கியத்துடனும், உடல் எடையைக் குறைப்பதற்கு குறைந்த திறன் கொண்ட உடற்பயிற்சிகளை நீங்கள் மேற்கொள்ளலாம்.

அதாவது வாக்கிங், ஸ்கிப்பிங், தோப்புக்கரணம் போடுவது போன்ற சிறு சிறு பயிற்சிகளை தினமும் அரை மணி நேரமாவது மேற்கொண்டு வாருங்கள். இது உங்களுக்கு நல்ல ரிசல்டைக் கொடுக்கும்.

மேலும் அதிகளவில் உணவை எடுத்துக் கொள்ளமால் காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிடுங்கள்.

உணவின் அளவைக் குறைத்துக் கொள்ளும்போது உங்களுக்கு ஆரோக்கியமாகவும், உடல் புத்துணர்ச்சியோடும் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.

ஆனால் இதுபோன்ற முறைகளை நீங்கள் மேற்கொண்டால் உடனே எடையைக் குறைக்க முடியாது. படிப்படியாக தான் குறைக்க முடியும்.

ஆனால், இதில் எவ்வித உடல் நல பிரச்சனைகளும் உங்களுக்கு ஏற்படாது. இனி நீங்களும் கொஞ்சம் இதை டிரை பண்ணிப்பாருங்க. நிச்சயம் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

நன்றி: முகநூல் பதிவு

15.02.2022 12 : 30 P.M

You might also like