நாடு முக்கியமா, மதம் முக்கியமா?

-உயர்நீதிமன்றம் கேள்வி!

கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவிகளுக்கு விதிக்கப்பட்ட உடை தொடர்பான உத்தரவு பெரும் சர்ச்சையையும், பிரச்சனையையும் உருவாக்கியிருக்கிறது.

இந்த நிலையில், இந்து மதக் கோயில்களில் நுழைபவர்கள் ஆடைக் கட்டுப்பாட்டைப் பின்பற்ற வேண்டும் என்று ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது.

இந்த மனுவில், “இந்துக்கள் அல்லாதோர், வெளிநாட்டவருக்கு கோவில்களில் அனுமதி இல்லை என்றும் கோயில்களில் லுங்கி, டிரவுசர் போன்ற ஆடைகளை அணிந்து வரக் கூடாது. இது தொடர்பாக விளம்பரப் பலகையில் வைக்க வேண்டும். அந்தச் சட்டத்தை அமல்படுத்தவும் வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, “ஆகம விதிகளில் வேட்டி தான் அணிய வேண்டும் என இருப்பதாக ஆதாரங்கள் உள்ளதா?” என்பன போன்ற கேள்விகளுக்கு தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி, “இந்தியா மதச்சார்பற்ற நாடா? அல்லது மத ரீதியாக பிளவுபட்ட நாடா? நாட்டில் ஹிஜாப், கோவில்களில் வேட்டி அணிவது ஆகியவற்றுக்காக போராடுவது அதிர்ச்சி அளிக்கிறது.

மதச்சார்பற்ற நாட்டில் இதுபோன்ற பிரச்சினைகள் மத ரீதியாக நாட்டில் பிளவை ஏற்படுத்தும்” என்று வேதனை தெரிவித்தார்.

10.02.2022   1 : 30 P.M

You might also like