தடுப்பூசி செலுத்தாவிட்டால் ஒமிக்ரான் மரணம் அதிகரிக்கும்!

– அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் தகவல்

உலகின் பல்வேறு நாடுகளில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

தடுப்பூசி செலுத்தியவர்கள் மீண்டும் பாதிப்பிற்கு உள்ளாகினாலும் உயிரிழப்பில் இருந்து தப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், நாம் கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவின் மேரிலாண்டு பல்கலைக்கழக தொற்று நோய் பிரிவு தலைவர் பஹீம் யூனுஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எச்சரித்த அவர், தரமான முகக்கவசம் அணிதல், தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் கொரோனாவிடம் இருந்து நம்மை தற்காத்து கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஒமிக்ரான் தொற்று பரவல் பாதிப்புகளை அதிகப்படுத்திக் கொண்டு செல்வதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ள நிலையில், உயிரிழப்பின் விகிதம் குறைவாக இருந்தாலும் மருத்துவ உட்கட்டமைப்புகளை ஒமிக்ரான் சிதைத்து வருவதாக அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு நாடும் ஒமிக்ரான் பாதிப்பில் இருந்து முழுமையாக வெளியேறவில்லை என்று கூறியுள்ள டெட்ராஸ், பல்வேறு நாடுகளில் தடுப்பூசி செலுத்தியவர்கள் விகிதம் மிகக் குறைவாக இருப்பது கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்தாவிட்டால் ஒமிக்ரான் தொற்றாலும் மரணம் அதிகரிக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.

You might also like