புத்தாண்டில் புத்துயிர் பெறுமா காங்கிரஸ்?

இந்த ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு வாழ்வா? சாவா? போராட்டமாக இருக்கும்.

காரணம்? 7 மாநில சட்டசபைத் தேர்தல்.

மோடி இரண்டாம் முறையாக பிரதமர் பதவி ஏற்று பாதிக் கிணறு தாண்டியுள்ளார்.

ஆம். இரண்டரை ஆண்டுகளை முடித்துள்ளார். அவரது ஆட்சிக்கு மதிப்பெண் போடும் வகையில் மினி பொதுத்தேர்தல் நடக்கப்போகிறது. அது – 7 மாநில சட்டசபைத் தேர்தல்.

அவை:

1.உத்தரபிரதேசம்

2 பஞ்சாப்

3.உத்தரகாண்ட்

4.குஜராத்

5.இமாச்சலப்பிரதேசம்

6.கோவா.

7.மணிப்பூர்.

உத்தரபிரதேசம்:

இந்த மாநில தேர்தல் களத்தில் காங்கிரஸ் இல்லை. பாஜக ஆளும் மாநிலம். பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளே பிரதான கட்சிகள். எதிர்க்கட்சிகள் உடைந்து கிடப்பதால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்புகள் அதிகம். ஒற்றை இலக்க இடங்களையே காங்கிரஸ் பெறும்.

பஞ்சாப்:

தேர்தல் நடக்கும் 7 மாநிலங்களில் இங்கு மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது.

காங்கிரசில் இருந்து விலகிய முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங், பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

ஆம் ஆத்மி தனித்து நிற்கிறது. அகாலி தளத்துடன் மாயவதியின் பகுஜன் சமாஜ் உடன்பாடு வைத்துள்ளது.

விவசாயிகள் புதிய கட்சியை உருவாக்கி, தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர். ஐந்து முனைப் போட்டி. வெற்றி யாருக்கு என்பது தெரியவில்லை. எதிர்க்கட்சிகள் துண்டுத் துண்டாக இருப்பது காங்கிரசுக்கு பலன் அளிக்கலாம்.

உத்தரகாண்ட்:

பாஜக ஆளும் மாநிலம். பிரதான எதிர்க்கட்சி காங்கிரஸ். இரு கட்சிகளுக்கு இடையே தான் போட்டி. பாஜகவுக்கு காங்கிரஸ் கடும் போட்டியைக் கொடுக்கும்.

குஜராத்:

மோடியின் மாநிலம். பாஜக ஆளும் கட்சி. காங்கிரஸ் எதிர்க்கட்சி. இரு கட்சிகளுக்கும் இடையே தான் பிரதான போட்டி. மோடியின் செல்வாக்கால் ஜெயித்து விடலாம் என பாஜக நம்புகிறது.

இமாச்சலப்பிரதேசம்:

இங்கும் பாஜக ஆட்சியே நடக்கிறது. காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. ஆளுங்கட்சி மீதான அதிருப்தியால் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளது.

மணிப்பூர்:

பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் வெற்றி பெறலாம்.

கோவா:

இங்கும் பாஜக ஆட்சியே நடக்கிறது. மே.வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அண்மைகாலமாக இந்த மாநிலத்தில் தனிக்கவனம் செலுத்தி வருகிறது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து ஆட்களை இழுத்துள்ளது. எந்த அளவுக்கு மம்தா கட்சி வாக்குகளை பிரிக்கும் என தெரியவில்லை.

தேர்தல் நடக்குமா?

7 மாநிலங்களிலும் தேர்தல் நிச்சயம் நடக்கும் என தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. ஆனால், கொரோனா உச்சம் தொட்டு வருவதால் தேர்தல் நடக்குமா? அல்லது ஒத்திவைக்கப்படுமா? என்பது வரும் நாட்களில் தான் தெரியவரும்.

– பி.எம்.எம்.

You might also like