பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வென்ற இந்தியப் பெண்!

இஸ்ரேலின் ஏலேட் நகரில் 70-வது பிரபஞ்ச அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80 பேர் கலந்து கொண்டனர்.

இதில் பராகுவே மற்றும் தென்னாப்பிரிக்க அழகிகளை வீழ்த்தி பிரபஞ்ச அழகியாக பஞ்சாப்பை சேர்ந்த 21 வயதான ஹர்னாஸ் கவுர் சாந்து வெற்றிபெற்று வாகை சூடினார்.

அவருக்கு முன்னாள் பிரபஞ்ச அழகியான மெக்சிகோவின் ஆண்டிரியா மீஸா கிரீடம் அணிவித்தார்.

பட்டத்தை வென்ற மகிழ்ச்சியுடன் மேடையில் பேசிய ஹர்னாஸ், “இன்றைய இளம்பெண்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அழுத்தம், தங்களை நம்புவது! நீங்கள் தனித்துவம் வாய்ந்தவர்கள் என்பதை நீங்கள் நம்புவது உங்களை அழகாக மாற்றுகிறது.

உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள், உலகளவில் நடக்கும் முக்கியமான விஷயங்களை பற்றி பேசுவோம். வெளியே வாருங்கள், உங்களுக்காக பேசுங்கள், ஏனென்றால் நீங்களே உங்கள் வாழ்வின் கதாநாயகிகள்” எனக் கூறினார்.

பிரபஞ்ச அழகி போட்டியின் இறுதிச் சுற்றில் காலநிலை மாற்றம் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த ஹர்னாஸ், இயற்கை பல பிரச்சனைகளை எதிர்கொள்ள மக்களின் பொறுப்பற்ற நடத்தை தான் காரணம் என்றார்.

பேசுவதை குறைத்துவிட்டு நடவடிக்கையில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம் என்ற ஹர்னாஸ்சின் பதிலே அவருக்கு வெற்றியை ஈட்டித் தந்தது.

2017-ம் ஆண்டு முதல் தனது அழகிப்போட்டி பயணத்தை தொடங்கிய ஹர்னாஸ், பெமினா மிஸ் இந்தியா, பெமினா மிஸ் பஞ்சாப் உள்ளிட்ட பட்டங்களை பெற்றுள்ளார். பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்து வரும் இவர், ஏராளமான பஞ்சாப் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like