பாடம் சொல்லிக் கொடுத்த மாஸ்டர்…!

மறைந்த டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் பற்றி இயக்குநர் சுப்ரமணிய சிவா தன் முகநூலில் பகிர்ந்து கொண்டவை.

****

“மாஸ்டரை, நான் சந்திக்கும் போது ஒரு பாடல் மட்டும் சூட்டிங் பண்ண வேண்டி இருந்தது.
படம் நன்றாக இருக்கிறது, அந்தப் பாடல் படத்தில் தேவையா? என்ற டிஸ்கஸ்ஸும் போய்கொண்டிருந்தது.

நான் மட்டும் அந்தப் பாடல் இருந்தால் தான் அப்பெண்ணின் காதல் முழுமை பெரும் என பிடிவாதமாக இருந்தேன்.

இது கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேல் போய்க் கொண்டிருக்கிறது. இச்சமயத்தில் தான் 10 நாட்களுக்கு ஒருமுறை சிவசங்கர் மாஸ்டர், எனக்கு முதல் படம் தந்த திரு. கிருஷ்ணகாந்த் சார்
அலுவலகத்துக்கு வந்து என்னை சந்திப்பார்.

ஒரு நாள் மாஸ்டரிடம், நீங்கள் பெரிய மாஸ்டர் நீங்கள் அடிக்கடி வாய்ப்புக்காக, என்னை சந்திப்பது எனக்கு தர்ம சங்கடமாக இருக்கு மாஸ்டர், அந்த பாடல் எடுப்பதாக முடிவு செய்யும் பச்சத்தில் உங்களை அழைக்கிறேன் என நான் சொன்னதும், மாஸ்டர் சொன்னார்,

“ராஜா… ஒருவர் யாரிடமும் கடன் கேட்டுதான் போகக்கூடாது, வாய்ப்பு கேட்டு வருபவர்களை வர வேண்டாம் என சொல்லாதீர்கள், நான் வருகிறேன். உங்களுக்கு வேலை இருந்தால்,
உங்கள் உதவியாளரிடம் வேலையில் இருப்பதாக தெரிவித்தால், நான் அடுத்தமுறை வந்து சந்திப்பேன்..

என்னை வர வேண்டாம் என மட்டும் சொல்லாதே ராஜா. ஒரு கலைஞன் வேலை செய்ய வேண்டும் இல்லாத போது வாய்ப்பு தேடதானே வேண்டும் என அவர் சொன்னது, எனக்கு மிகப் பெரிய பாடமாகவே அமைந்தது.

அன்று முதல் வாய்ப்புத் தேடி வருபவர்களை நான் முடிந்தவரை சந்தித்து விடுவேன். அதன் பிறகு அந்தப் பாடலுக்கு அவர்தான் நடனம் அமைத்தார்.

அந்தப் பாடல் தான்  “மன்மத ராசா…”
அந்தப் பாடல் ‘திருடா திருடி’ படத்தை வெற்றியின் உச்சத்திற்கு இட்டுச் சென்றது.

மேலும் தம்பி தனுஷ், சாயாசிங் அதிவேக நடனம் அனைவரையும் பேச வைத்தது.
சேனல்களில் அதிகம் ஒளிபரப்பிய பாடலாகவும் இடம் பிடித்தது. இசை அமைத்த தினா சார்,
ஒளிப்பதிவு செய்த திரு.ரமேஷ், அப்பாடலை எழுதிய நண்பர் யுகபாரதிக்கும் மேலும் புகழை பெற்று தந்தது.

பிறகு, மாஸ்டருடன் தொங்கா தொங்கதி (தெலுங்கு திருடா திருடி), பொறி, சீடன் படங்களில் இணைந்து பணிபுரிந்ததும் மறக்க முடியாதது.

அவரை நடிகராகப் பார்த்த போதும் மகிழ்ச்சியாகத் தான் இருந்தது. ஆனால், அவர் இனி இல்லை, இழப்பிற்கு வார்த்தைகள் சமமாகது, மீண்டு வருவார் என்று தான் நினைத்தேன். காலம் கருணை இல்லாதது. காலத்திற்கு சென்டிமென்ட் கிடையாது. பிறக்கும் போது மறைவும் நிச்சயம் என்பதே இயற்கை விதி, ஏற்றுகொண்டே ஆக வேண்டும்.

சாதித்தே மறைந்தார் மாஸ்டர், அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்…
மாஸ்டரைப் பிரிந்து வாடும் மாஸ்டரின் செல்ல பிள்ளைகள் தம்பி விஜய், தம்பி அஜய் மற்றும் குடும்பத்தார்கள் துயரிலிருந்து மீண்டு வர இயற்கையும், இறைவனும் அவர்களுக்கு துணை இருக்கட்டும்.

மாஸ்டர் சிவசங்கர் அவர்களை வணங்குகிறேன்.

– நன்றி இயக்குநர் சுப்ரமணிய சிவா முகநூல் பதிவு

You might also like