நீர் நிலைகளில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்!

– காவல்துறை எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்பட சில மாவட்டங்களில் அதிக கனமழை பெய்தது.

இதனால், அனைத்து மாவட்டங்களில் உள்ள ஏரிகள், ஆறுகளில் தண்ணீர் நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது. குறிப்பாக பாலாற்றில் சுமார் 20 ஆயிரம் கனஅடி நீர் ராணிப்பேட்டை அடுத்த காவேரிப்பாக்கம் அணைக்கட்டில் இருந்து வெளியேறி காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக மாமல்லபுரம் கடலில் சென்று கலக்கிறது.

செய்யாற்றில் செல்லும் 15 ஆயிரம் கன அடி நீர் திருமுக்கூடல் பாலாற்றில் கலக்கிறது. இதேபோல், கிராமங்களில் உள்ள ஏரிகள் நிரம்பி உபரிநீர் செல்கிறது.

இந்நிலையில் பொதுமக்கள் ஆபத்து என்பதை உணராமல், தண்ணீரில் இறங்குவது, குளிப்பது, புகைப்படங்கள், செல்பி எடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு ஆபத்தை சந்தித்து சில நேரங்களில் உயிரிழப்பை சந்திக்க நேர்கிறது.

எனவே இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுமக்கள் நீர் நிலைகளில் இறங்கி தங்கள் உயிர்களை இழப்பது மட்டுமின்றி குடும்பத்தினரையும் மீளாத் துன்பத்தில் ஆழ்த்தும் செயல்களைத் தவிர்த்து அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம்” எனக் கூறப்பட்டுள்ளது.

You might also like