ராணுவத்தின் தாக்குதல் திறனை மதிப்பிட லடாக்கில் பயிற்சி!

இந்தியா – சீனா இடையே நிலவி வரும் மோதல் போக்கைத் தொடர்ந்து, கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினரும் சுமார் 60 ஆயிரம் வீரர்களைக் குவித்துள்ளனர்.

இந்நிலையில், நம் ராணுவத்தினரின் துரிதமான தாக்குதல் திறனை மதிப்பிட வான்வழி பயிற்சிகள் நடத்த திட்டமிடப்பட்டது.

கிழக்கு லடாக்கின் எல்லைப் பகுதியில் இந்தப் பயிற்சிகள் துவங்கி தொடர்ந்து நடந்து வருகின்றன.

ராணுவத்தின் ஷத்ருஜீத் படைப்பிரிவு இந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. பயிற்சியின் ஒரு பகுதியாக போர் விமானத்தில் வந்த வீரர்கள் 14 ஆயிரம் அடி உயர மலைப்பகுதியில் இறக்கிவிடப்பட்டனர்.

குறிப்பிட்ட பகுதியில் அவர்கள் துல்லியமாக இறங்கி, மீண்டும் குழுவாக இணைந்து, தங்களுக்கு அளிக்கப்பட்ட போர்ப் பணியைத் துரிதமாக செய்கின்றனரா என்பது சோதிக்கப்பட்டது.

மலை உச்சியில் ‘மைனஸ் 20 டிகிரி செல்ஷியஸ்’ குளிரில் சவாலான இலக்கை வீரர்கள் துடிப்புடன் செய்து முடித்தனர். இதையடுத்து இந்தப் பயிற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

You might also like