உணர மறுக்கும் உண்மைகள்…!

வெட்டி அரட்டை அடிக்கும் டீக்கடை அது. அதன் உரிமையாளர் தன் வாடிக்கையாளரிடம் உலகப் பேச்சுக்களை வம்பளந்து கொண்டிருந்தார்.

அப்போது, “இந்த நாட்ல லூசுப் பசங்க ஜாஸ்தி… அதோ வர்றானே, அவன்தான் உலகத்திலேயே பெரிய முட்டாள்…” என்று தூரத்தில் வந்த ஒரு சிறுவனைக் கைகாட்டினார் கடை உரிமையாளர்.

“எப்படிச் சொல்கிறீர்…?” என்று கேட்டார் வாடிக்கையாளர்.

“இப்போ சுவனிங்க!” என்றபடி, சிறுவனை அழைத்தார் கடைக்காரர்.

கற்பனை வாகனத்தில் வந்து கொண்டிருந்த அவன், ‘டுர்ர்ர்’ என வண்டியை கடை முன் நிறுத்தினான்.

கடை உரிமையாளர் ஐந்து ரூபாய் நாணயத்தை ஒரு கையிலும் இரண்டு ஒரு ரூபாய் நாணயங்களை மற்ற கையிலும் வைத்துக் கொண்டு, அந்தச் சிறுவனைப் பார்த்து, “இவற்றில் எது உனக்கு வேண்டும்? என்று கேட்கிறார்.

அந்தச் சிறுவன் இரண்டு நாணயங்கள் இருந்த கையைக் காட்டினான். அவர் கையை விரிக்க காசை எடுத்துக் கொண்டு, தனது வண்டியிலேறி டுர்ர்ர் ஆகி விட்டான்.

அந்தக் கடை உரிமையாளர், ”பார்த்தீர்களா? நான்தான் சொன்னேனே.. இவனுக்கு எப்பவாவது புத்தி வரும். அஞ்சு ரூபாய்க் காசை எடுப்பான்னு பார்க்கிறேன். ம்ஹூம்! அவன் எப்போதுமே கற்றுக் கொள்ளப் போவதில்லை!” என்று அலுப்போடு கூறினார்.

“யாரந்தப் பையன்…? என்று கேட்டார் வாடிக்கையாளர்.

“என் மகன் தான்! இல்லேன்னா ஏன் காசைக் குடுக்கப் போறேன்…?” என்று அலுப்போடு சொன்னவரிடம் விடை பெற்றுக் கிளம்பிய வாடிக்கையாளர், கடைவீதிக்குப் போனபோது, அங்கே அந்தச் சிறுவனைக் கண்டார்.

பெட்டிக் கடை ஒன்றில் சாக்லெட் வாங்கி, அதனைப் பிரித்து கொண்டிருந்தான்.

அவனிடம் அவர், “தம்பி! உன்னை ஒரு கேள்வி கேட்கட்டுமா? ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை விட்டு விட்டு, இரண்டு ஒரு ரூபாய் நாணயத்தை நீ ஏன் எடுத்துச் சென்றாய்?” என்று கேட்டார்.

சாக்லெட் க்ரீம் படிந்த விரலை நக்கிக் கொண்டே அந்தச் சிறுவன் சொன்னான்.

“அதன் காரணம், நான் அந்த ஐந்து ரூபாய் நாணயத்தை என்று எடுத்துக் கொள்கிறேனோ, அன்றே இந்த விளையாட்டு முடிந்து போகும்” என்று கூறினான்.

கேள்வி கேட்டவர் திகைத்து நின்றார். “எங்கப்பா சரியான லூசு! என்னைத் திருத்தறதா நினைச்சு, டெய்லி எனக்கு ரெண்டு ரூபா தந்துக்கிட்டே இருக்கிறார்.” என்றான்.

அடுத்தவனை முட்டாள் என்று நீ நினைத்தால், உன்னை நீ முட்டாளாக ஆக்கிக் கொள்கிறாய்! அடுத்தவர் மீது சேற்றை அள்ளி வீச நினைத்தால், முதலில் சேறாவது உன் கைகள்தான் என்பதை உணர மறுக்கிறோம் நாம்!

– இராம்குமார் சிங்காரம் எழுதிய ‘ஒரு கதை… ஒரு விதை…’ என்ற நூலிலிருந்து…

http://ramkumarsingaram.com

You might also like