ஜம்மு-காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில்…!

நாடு சுதந்திரம் பெற்ற பின், 1947 அக்டோபர் 26 ஆம் தேதி, ஜம்மு – காஷ்மீரை இந்தியாவுடன் சேர்ப்பதற்கான ஒப்பந்தத்தில் காஷ்மீர் மன்னர் ஹரிசிங் கையெழுத்திட்டார்.

அதற்கு மறுநாளான அக்டோபர் 27ல், காஷ்மீர் பட்காம் பகுதியில் இந்திய விமானப் படை தரையிறங்கியது. அங்கு அத்துமீறி புகுந்திருந்த பாகிஸ்தானியர்களை விரட்டியடித்தது.

பட்காமில் நம் விமானப் படை தரையிறங்கியதன் 75ம் ஆண்டு துவக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேச தலைநகர் ஸ்ரீநகரில் நடந்த நிகழ்ச்சியில் விமானப் படை மேற்கு கமாண்ட் பிரிவின் தலைவர் ஏர் மார்ஷல் அமித் தேவ் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின்போது பேசிய அவர், “நம் விமானப் படையும், ராணுவமும் இணைந்து, 1947 அக்டோபர் 27ல் மேற்கொண்ட நடவடிக்கைகளால், இப்போதுள்ள ஜம்மு – காஷ்மீர் பகுதி நமக்கு சொந்தமானது.

அதே நேரத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வசிக்கும் மக்களை அந்நாடு சரியாக நடத்துவதில்லை.

அதனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட, ஜம்மு – காஷ்மீர் முழுவதும் விரைவில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

எனினும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க, இப்போது எந்த திட்டமும் இல்லை” எனக் கூறினார்.

You might also like