மாண்புடன் வாழ்வோம்…!

கேளடா மானிடவா
எம்மில் கீழோர் மேலோர் இல்லை

ஏழைகள் யாருமில்லை செல்வம்
ஏறியோர் என்றும் இல்லை
வாழ்வுகள் தாழ்வுமில்லை
என்றும் மாண்புடன் வாழ்வோமடா

                 (கேளடா)

வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக் கொருநிற மாகும்

சாம்பல் நிறமொரு குட்டி
கருஞ்சாந்தின் நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி
வெள்ளைப் பாலின் நிறமொரு குட்டி

எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஒரே தரமன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இது ஏற்றமென்றும் சொல்லலாமோ

சாதி பிரிவுகள் சொல்லி
அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்
நீதி பிரிவுகள் செய்வார்
அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்
சாதி கொடுமைகள் வேண்டாம்
அன்பு தன்னிற் செழித்திடும் வையம்

சாதி கொடுமைகள் வேண்டாம்
அன்பு தன்னிற் செழித்திடும் வையம்
ஆதரவுற்றிங்கு வாழ்வோம்

தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்

                       (கேளடா)

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர்
நல்ல மாதர் அறிவை கெடுத்தார்

கண்கள் இரண்டினில் ஒன்றைக்
குத்திக் காட்சி கெடுத்திடலாமோ
பெண்கள் அறிவை வளர்த்தால்
வையம் பேதைமையாற்றிடும் காணீர்

                      (கேளடா)

ஏழைகள் யாருமில்லை செல்வம்
ஏறியோர் என்றும் இல்லை
வாழ்வுகள் தாழ்வுமில்லை
என்றும் மாண்புடன் வாழ்வோமடா

                   (கேளடா)

  • ‘மகாகவி பாரதியார்’ எழுதிய இப்பாடல் 2000-ம் ஆண்டில் வெளிவந்த ‘பாரதி‘ திரைப்படத்தில் இடம்பெற்றது.
You might also like