கடவுள் பெயரில் நன்கொடை வசூல் கூடாது!

– சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னையை சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘நாகை மாவட்டம், திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில், வைகாசி மாத பிரம்மோற்சவ விழா இரண்டு ஆண்டுகளாக நடக்கவில்லை.

எனவே, எதிர்காலங்களில் உற்சவங்களை நடத்த, ஜீயர்கள், ஸ்தலத்தார்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில், சவுரிராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், நவம்பர் 10 முதல், 19ம் தேதி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், ‘கொரோனா காரணமாக பிரம்மோற்சவம் நடத்தப்படவில்லை; இதில், கோவில் நிர்வாக அதிகாரி தலையீடு எதுவும் இல்லை; நிகழ்ச்சிக்காக, பல சபாக்கள் சார்பில், பணம் வசூலிக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ‘கடவுள் பெயரில் தனி நபர்கள், தனியார் அறக்கட்டளைகள் நன்கொடை வசூலிக்கக் கூடாது’ என நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்தனர்.

அதன்பின், தொலைவில் இருந்து வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க, நன்கொடை வசூலிப்பதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், ”பாரம்பரியமாக உள்ள நடைமுறையில் குறுக்கீடு செய்ய மாட்டோம். சட்டவிரோத அம்சங்கள் ஏதேனும் சுட்டிக் காட்டப்பட்டால் நீதிமன்றம் தலையிடும்” என தெரிவித்தனர்.

You might also like