பொதுவுடைமை இயக்கம் ஏந்திய போர் வாளே…!

மறைந்த தோழர் தா.பாண்டியன் பற்றி கவிஞர் சிற்பி!

*****
தமிழனுக்குரிய கருப்பு நிறம்
இயக்கத்தின் பதாகையாய்
தோளில் துவளும் செம்மை நிறம்

ஆயிரம் யானை பலம் கொண்டு
துரும்புகளையும் எழவைக்கும்
பேச்சுத் திறம்

ஜீவா… அன்று
தோழா..வா..வா..
என அழைத்துத் தழுவிய
தொண்டின் உரம்

பாரதியின்
பாஞ்சாலி சபத
ஆவேச மின்சாரமும்
பாரதிதாசனின்
புரட்சிக் கவியில்
கொந்தளிக்கும் அனலின் சாரமும்

பட்டுக் கோட்டையின்
சூறாவளித் தமிழில்
கருத்தரித்த வீரமும்
திகுதிகு என எரியும்
நெருப்பா
எங்கள் தா.பா ?

பாதையில் தெளிவு
பார்வையில் தெளிவு
இல்லை நெளிவு வளைவு !
இல்லை தந்திரக் குழைவு !
பொதுவுடைமை இயக்கம்
ஏந்திய போர் வாளே !
சுடரும் கருப்பு வைரமே !

ஓடும் குருதியில்
உதிரும் கண்ணீரில்
பாலன் இல்லத்தின் மேல் பறக்கும்
மணிக் கொடியில்
உணர்ச்சி வெதும்பித் ததும்பும்
மேடைத் தமிழில்
உன்னைக் காத்திருப்போம்
ஒவ்வொரு செம்பருத்தி பூக்கும்போதும்
உன்னைப் பார்த்திருப்போம்!

05.03.2021  01 : 57 P.M.

You might also like