தென்மாநிலங்களில் வேகமாகப் பரவும் உருமாறிய கொரோனா!

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் உள்ள மூலக்கூறு உயிரியியல் மையம் சார்பில், கொரோனா வைரசின் பல்வேறு வகைகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த ஆண்டு இந்தியாவில் அவை எப்படி பரவின என்பது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கைகளாக வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா வைரசின் வகைகளைப் பற்றியும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவை எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தன என்பது பற்றியும் முழுமையான பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது.

இது குறித்து பேசிய மூலக்கூறு உயிரியியல் மையத்தின் இயக்குனர் டாக்டர் ராகேஷ் மிஷ்ரா, “புதிய வகை கொரோனா வைரஸ்கள் உலகம் முழுவதுமுள்ள பல நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி, அச்சுறுத்தி வருகின்றன. அடையாளம் காணப்பட்ட அந்த வகை வைரஸ்கள் இந்தியாவில் குறைந்த அளவிலேயே பரவின.

இவற்றில், அதிக பரவல் விகிதங்களைக் கொண்ட, நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பக் கூடிய வகைகளான, உருமாறிய இ484கே கொரோனா மற்றும் உருமாறிய என்501ஒய் ஆகிய வைரஸ்களும் அடங்கும்.

எனினும், போதிய அளவு அவற்றின் தொடர்ச்சியைக் கண்டறியாமல் விட்டதும் இந்தியாவில் குறைந்த பரவலுக்குக் காரணம். இந்த வைரஸ்கள் மற்றும் பிற புதிய வகை வைரஸ்களின் ஜீனோம்களின் தொடர்ச்சியை வரிசைப்படுத்தி நாடு முழுவதும் துல்லியத்துடன் அடையாளம் காண வேண்டிய அவசரம் ஏற்பட்டுள்ளது.

தென்மாநிலங்களில் என்440கே வைரஸ் அதிக அளவில் பரவி வருகின்றன என்பதற்கான சான்றுகள் வெளிவந்துள்ளன. அவற்றின் பரவல் பற்றி முறையாக புரிந்து கொள்வதற்கு நெருங்கிய கண்காணிப்பு அவசியமாகிறது. துல்லிய மற்றும் சரியான தருணத்தில், உருமாறிய புதிய வகை வைரஸ்களைக் கண்டறிவது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அடுத்தடுத்து பேரிடர் நிகழாமல் தடுப்பதற்கு அது அவசியம்” என்று கூறியுள்ளார்.

20.02.2021 12 : 25 P.M

You might also like