கடவுள் எந்தச் சாதியையும் அங்கீகரிக்கவில்லை!

திருச்சி திருவானைக்கோவில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் விழாவில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க அனுமதி வழங்க, குழு அமைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள், “கடவுள் எந்தச் சமூகத்தையும் அங்கீகரிக்கவில்லை. பிரார்த்தனை செய்ய அங்கு செல்லும் மனிதனை மட்டுமே அங்கீகரிக்கிறார்.

வேறுபாடுகளுக்கு இடையே இறைவன் இருப்பதில்லை. கோயில் என்பது மன அமைதிக்காகத் தான், மனிதர்கள் இடையே பாகுபாடு உருவாக்குவதற்காக அல்ல. இறைவனை வணங்கச் செல்பவர்கள் மனிதாபிமானத்துடன் இருப்பதுதான் முக்கியம்.

எந்தவித ஏற்றத்தாழ்வும் பாகுபாடும் கடவுள் பார்ப்பதில்லை. மனிதர்கள் மத்தியில் பாகுபாடு பார்ப்பதை கடவுள் ஏற்க மாட்டார். கோயில் இனப்பாகுபாடு தொடர்பான பிரிவினைக்கான இடம் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கோயில் திருவிழாவில் மனிதர்களுக்கு இடையே பாகுபாடு காட்டக் கூடாது. கோயிலுக்கு செல்லும்போது வேறுபாடுகள் அனுமதிக்கப்பட்டால் அது அரசியல் சட்டத்திற்கு எதிரானதாகும்.

கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் கோயிலில் வந்து தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.

திருச்சி திருவானைக்கோவில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் பிரச்சனைக்கு அமைதிப் பேச்சு நடத்தி முடிவு எடுக்கலாம்” என உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கைத்  தள்ளுபடி செய்தனர்.

17.02.2021  02 : 05 P.M

You might also like