உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்…!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாந்
தொழுதுண்டு பின் செல்பவர்
என்றே  – சொல்லும்

பழுதற்ற வள்ளுவன் பைந்தமிழ் நீதி
வழி சென்று மாண்பால் உயர்ந்த நாடு
நமது தாய்நாடு…

நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும்
கூட்டுப் பண்ணை விவசாயம் – பட்ட
பாட்டுக்குத் தகுந்த ஆதாயம் உண்டு
பழைய கொள்கைகளை விடுவது ஞாயம்
                                        (நாட்டு…)

காட்டையும் மேட்டையும் தோட்டந் தொடிகள் 
கழனிகள் செய்வது திறமை – அதனால்
கட்டாயம் நீங்கும் வறுமை – அவ்வைப்
பாட்டியும் பாட்டால் பாடிப் பெருமை
பாராட்டிய தொழில் முறைமை – இது
பரம்பரையாய் நமக்குரிமை – நம்ம
                                         (நாட்டு…)

ஒத்தைக் குடித்தனம் பத்துக் காணியில்
உழுது பாடுபட முடியாது – ஒரு
பத்துக் குடித்தனம் நூறு காணியில் 
பங்காய் உழுவதுதான் தோது

பாளையக்காரர் ராஜாதி ராஜா்
பதவிகள் பறக்கிற போது – நம்ம
பட்டாக்கள் மிட்டா மிராசுகள் ஜம்பம்
கட்டாயமாய்ப் பலிக்காது
                                       (நாட்டு…)

நாளுக்கு நாளாக் காலம் மாறுது
நடப்பதை நெனச்சா நடுக்கமாகுது
ஆளை ஏய்க்க இனி முடியாது – மக்கள்
ஆட்சியில் சுயநலம் கூடாது நம்ம
                                      (நாட்டு…)

புருஷன் பொண்டாட்டி புள்ள குட்டிங்க
உருப்படிக் கணக்கையும் போட்டுக்கணும்
சரிசமமாக விகிதாச்சாரப்படி
சாப்பாட்டு செலவுக்கும் வாங்கிக்கணும்

வரும்படி தன்னை அதிமாக்கணும்
வகை தொகையான செலவுஞ் செய்யணும்
உலகம் நம்மைக் கண்டு நடக்கவே
உண்மையோடு நாம் உழைக்கணும்
உயிர் பிழைக்கணும்  – நம்ம
                                     (நாட்டு…)

1957-ம் ஆண்டு நாகேஸ்வர ராவ் நடித்து வெளிவந்த ‘எங்க வீட்டு மகாலட்சுமி‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் உடுமலை நாராயணகவி.

20.01.2021 – 12.06 P.M.

You might also like