நேர்மைக்கும், எளிமைக்கும் அடையாளமாகத் திகழ்ந்த லால்பகதூர் சாஸ்திரி!

கே.எஸ்.இராதாகிருஷ்ணன் பக்கங்கள்:

இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர் ராம்நாத் கோயங்கா, முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பற்றி எழுதிய குறிப்பு ஒன்று கண்ணில் பட்டது.

காமராஜர் திட்டத்தின்படி 1963-ல் நேருவின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் கட்சிப் பணிக்காக பதவி விலகினர்.

சாஸ்திரியும் தன்னுடைய கேபினெட் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அவருக்கு அளித்த அரசு காரை திருப்பி ஒப்படைத்துவிட்டு அவருடைய வீட்டிற்கு செல்வதற்காக டெல்லியில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது அந்த வழியாகச் சென்ற கோயங்கோ  சாஸ்திரி அங்கு நிற்பதைப் பார்த்தார்.

உடனே காரை நிறுத்தி ஏன் சாஸ்திரி இங்கு நிற்கிறீர்கள் என்று கேட்டபோது, தான் ராஜினாமா செய்துவிட்டதாகவும், வீட்டிற்குச் செல்ல பேருந்துக்காக காத்திருப்பதாகக் கூறினார்.

உடனே கோயங்கா, அப்படியா, வாங்க உங்களை வீட்டில்விட்டு விடுகிறேன் என தனது காரில் ஏற்றுக்கொண்டராம்.

பேச்சுக்கள் இருவரிடையே தொடர்ந்தன. சாஸ்திரி சொன்னாராம், அமைச்சர் சம்பளம் கிடைக்குமென்று சில ஆயிரங்கள் கடன் வாங்கி விட்டேன். அதை எப்படித் திருப்பித் தருவது என்று பேச்சுவாக்கில் சொல்லியுள்ளார்.

உடனே கோயங்கோ சாஸ்திரியின் கடனை அடைத்துள்ளார். சில மாதங்கள் கழித்து, சாஸ்திரிக்கு இலாகா இல்லாத கேபினெட் அமைச்சர் பதவி கிடைத்த பின்னர், மாதாமாதம் கோயங்கா அடைத்த கடன் தொகையை சில மாதங்களுக்குப் பிறகு சிறிது சிறிதாக அடைத்தாராம்.

லால் பகதூர் சாஸ்திரி இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றபோது காஷ்மீரில் 1965-ல் பாராமுல்லாவில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் கடுமையான போர் அபாயங்கள் துவங்கின.

சாஸ்திரி “ஜெய் ஜவான்” என்ற கோஷத்தோடு இந்தப் போரை சமாளித்தார். “ஜெய் ஜவான், ஜெய் கிசான்” என்று இவரால் முழக்கமிடப்பட்டது.

அன்றைய காங்கிரஸ் தலைவர் காமராஜர் அறிவிப்பின்படி சாஸ்திரி இந்தியாவின் இரண்டாவது பிரதமராக, இடைக்கால பிரதமர் குல்சாரிலால் நந்தா முன்மொழிய, அதை மொரார்ஜி தேசாய் வழிமொழிந்தார்.

இன்றைக்கு சாஸ்திரியின் 55-வது நினைவு தினம். உருவத்தில் சிறிதாக தெரிந்தாலும் அரசியலிலும், பொது வாழ்விலும், தைரியத்திலும் உயர்ந்த மனிதராகவே இருந்தார்.

இந்தியா – பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை ரஷ்யா தாஷ்கண்ட்டில் நடைபெற்றது. அந்த உடன்படிக்கை குறித்தான பேச்சுகள் கையெழுத்தான தேதியிலேயே மறைந்தார்.

ரஷ்ய அதிபர் கோசிஜின்னும், பாகிஸ்தானின் பிரதமர் அயூப் கானும் சாஸ்திரியின் உடலை தோளில் சுமந்து விமானத்தில் ஏற்றி இறுதி மரியாதை செலுத்தினர்.

ரஷ்ய மக்கள் 10 லட்சம் பேர் அவருக்கு வழி நெடுக அஞ்சலி செலுத்தினர். இவரது இறுதிச் சடங்கில் மவுண்ட்பேட்டனும் கலந்து கொண்டார்.

நேர்மையான எளிமையான சாஸ்திரியார் வாழ்க்கை நமக்கு நல்ல பாடம்.

11.01.2021 – 04 : 35  P.M

You might also like