பெண்ணின் உள்ளக் குமுறலை உணர வைத்த அம்பை!

எழுத்தாளர் அம்பையின் ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ கதையில் ஒரு பெண் குழந்தை பூப்படைகிறாள்.
 
அந்தக் குழந்தை நல்ல கருப்பு. அவளைப் பெற்ற தகப்பனே கறுப்பி கறுப்பி என்றுதான் அழைக்கிறார்.
 
ஆனால் அவளுடைய அம்மா அவளை அழகி என்று கொண்டாடுகிறார். அம்மா ஊருக்குப் போன நாளில் அக்குழந்தை பூப்பெய்துகிறாள்.
 
வீட்டில் உள்ள அக்காவும் மற்றவர்களும் அச்சிரத்தையோடும் சாதாரணமாகவும் அதை எதிர்கொள்ள, அன்று ஏற்படும் பயமும் நடுக்கமுமாக, தன்னைச் சீராட்டும் அம்மாவை எதிர்பார்த்து அவளிடம் எல்லா மனக்கிலேசங்களையும் கொட்டுவதற்காக அக்குழந்தை காத்திருக்கிறாள்.
 
தங்கை மகளை பெண் பார்க்க வருகிறார்கள் என்பதற்காக, ஒத்தாசையாக இருக்க என்று, ஊருக்குப் போனா அம்மா மறு நாள் திரும்பி வருகிறாள்.
 
தங்கை மகள் கருப்பு என்பதால் வந்த வரன் தட்டிப் போகிறது. அந்தச் சோகத்தோடு வீடு திரும்பும் அம்மா தன் கருத்த மகளும் பூப்படைந்து நிற்பதைக் கண்டு, “உனக்கு இந்த இழவுக்கு என்னடீ அவசரம்.. இதுவேற இனிமே ஒரு பாரம்..” என்று சுளீரெனக் கேட்கிறாள்.
 
ஒலி இல்லாக்கேவல்கள் அக்குழந்தையின் நெஞ்சில் முட்டக் கதை முடிகிறது.
 
அக்குழந்தையின் மனதில் தெய்வமாக உயர்ந்து நின்ற அம்மாவை அம்மாவே கொலை செய்கிறாள்.
 
– ச.தமிழ்ச்செல்வன்
You might also like