சிறுகதை:
தன் முன் கட்டிங் டேபிளில் விரித்திருந்த வேலைப்பாடுகள் மிக்க அந்த திருமண ஆடையை வெட்டிக் கொண்டிருந்தாள் தேன்மொழி. மனது முழுவதும் உதிரன் நேற்று இரவு கேட்டதிலேயே இருந்தது.
எப்படியாவது இன்று முதலாளி அம்மாவிடம் முன்பணம் கேட்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.
உதிரன் எதையும் பெரிதாக ஆசைப்பட்டு கேட்கமாட்டான். வருத்தம் உணர்ந்தவன்.
அவனுடனான முன்தின இரவு உரையாடல் மனதிற்குள் ஓடியது.
“பாரஸ்ட்னா காடு தானேம்மா?”
பாயில் படுத்திருந்த உதிரன் தாயிடம் கேட்கத் தொடங்கினான்.
“ஏன்டா உனக்கு தெரியாதா? காடு பத்தி எவ்ளோ கதை சொல்லியிருக்கேன்”
“தெரியும்மா”
சிறிது இடைவெளி விட்டவன் மீண்டும் கேட்கத் தொடங்கினான்.
“பிளாக் பாரஸ்ட்னா கருப்பா இருக்குமாம்மா காடு?”
“ஆமாண்டா நிறைய மரங்கள் அடர்ந்து இருந்துச்சுன்னா அதைக் கருங்காடு என்று சொல்லுவாங்க, அதுதான் இங்கிலீஷ்ல பிளாக் பாரஸ்ட் ஆ இருக்கும்”
அவளாக ஏதோ பதில் சொல்ல, பாயின் ஓரத்தில் கிழிந்திருந்த தர்ப்பைகளை கைகளால் நிமிண்டிக் கொண்டே, உத்திரத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான் உதிரன். அருகிலுள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிப்பவன்.
காலையிலிருந்து தையல் இயந்திரத்தை மிதித்து மிதித்துக் களைத்திருந்த தேன்மொழியின் கண்கள் தன்னையறியாமல் செருகினாலும், எதிர்காலம் குறித்த பயம் அவளை விழித்திருக்கச் செய்தது.
“அம்மா தூங்கிட்டியா?”
உதிரனின் குரல் கேட்டு விழித்த தேன்மொழி
“இல்லடா… சொல்லு”
“நாளான்னைக்கு எனக்கு பிறந்தநாள் வருதுல்லமா?
“ஆமா, இந்த தடவ நீ கேட்ட புது டிரஸ்ஸ அம்மா எப்படியாவது வாங்கிட்றேன் என்ன?” – என்று அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
குடும்பம் குறித்த கவலை இல்லாத தன் கணவனை நினைத்து கவலை கொண்டாள்.
எப்போதாவது வீடு வந்து செல்லும் அவனுக்கு மனைவி, மகனைப் பற்றியெல்லாம் எந்த அக்கறையும் இல்லை.
கையில் கிடைத்த வேலையை செய்து கொண்டிருப்பதாகவும் கைநிறைய காசு வைத்திருப்பதாக பார்த்த சிலர் சொன்னாலும், அதில் கொஞ்சம் கூட வீட்டிற்கு கொடுக்கத் தோன்றாத அவன் பொறுப்பின்மை குறித்த ஆதங்கம் அவளுள் இருந்து கொண்டேயிருந்தது.
“அம்மா”
“சொல்லுடா”
“பிளாக் பாரஸ்ட்னா, கேக்கு தெரியுமா உனக்கு?”
“தெரியும்டா, உனக்கு எப்படித் தெரியும்?”
“இன்னைக்கு நவீனுக்கு பிறந்தநாள். ஸ்கூல்ல கேக் வெட்டினாங்கம்மா. கருப்பு கலர்ல வெள்ளை கலர் கிரீம் வச்சிருந்துச்சுமா. அவ்வளவு ருசியா இருந்தது தெரியுமா? அது பேரு பிளாக் பாரஸ்டாமா”
“அந்த கேக்கு காட்டிலேருந்து வருமாம்மா, எதுக்குமா பிளாக் பாரஸ்ட்-ன்னு பேர் வெச்சுருக்காங்க?”
“தெரியலடா”
சிறிது நேரம் அமைதி நிலவியது. மீண்டும்…
“அம்மா எனக்கும்…”
“கேக் வேணுமா? சரிடா நாளைக்கு டவுன்லேருந்து வரும்போது வாங்கிட்டு வரேன்”
“இல்லம்மா அது விலை ரொம்ப கூடவாமா, நாம வாங்க முடியாதாம்மா, நவின் சொன்னான்”
“எவ்ளோ டா இருக்கும் இருநூறு முன்னூறு இருக்குமா?”
“இல்லம்மா இன்னும் கூட இருக்குமாம்”
“நாளைக்கு அண்ணாச்சி கடையில கேட்டுட்டு உனக்கு வாங்கிட்டு வரேன் என்ன?”
“இல்லம்மா எனக்கு சாப்பிட வேணாம்மா. நேத்தே சாப்பிட்டேன். என்னோட பிறந்தநாளுக்கும் அதே மாதிரி கேக் வெட்டி எல்லாருக்கும் கொடுக்கலாமா?” – என்று கேட்ட மகனை அவளால் தவிர்க்க முடியவில்லை.
சரிடா என்று சொல்லிவிட்டு இப்பொழுது அவள் உத்திரத்தை உறுத்து பார்க்கத் தொடங்கினாள். அம்மாவிடம் சொல்லிவிட்ட நிம்மதியில் உதிரன் உறங்கிப்போனான்.
காலையில் அவனை பள்ளிக்கு கிளம்பிவிட்டு, வேலைக்கு கிளம்பினாள் தேன்மொழி. நாள் முழுவதும் தையல் மெஷினோடு போராடியவளின் தலை வலியில் தெறிக்கத் தொடங்கியது.
மெல்ல பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கியவள் வழியில் இருந்த கடையில் தேநீர் குடிக்க பத்து ரூபாய் கொடுத்து டோக்கன் பெற்றுக் கொண்டாள்.
டீயை வாங்கி இரு கைகளிலும் பொத்தி மெல்ல சுவைக்கத் தொடங்கினாள். பக்கத்தில் இருந்த கண்ணாடி பேழைக்குள் விதவிதமான கேக்குகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, கருப்பு கலரில் வெள்ளை கிரீம் தடவிய அந்த கேக்கின் மீது அவளுடைய கவனம் சென்றது.
இது மாதிரிதானே உதிரன் நேற்று சொன்னான். கடைக்காரரிடம் விசாரிப்போமென்று
“அண்ணாச்சி அந்த கேக் என்ன விலை அண்ணாச்சி”
“எத்தனை கிலோ வேணும்” கடைக்காரர் வினவினார்.
“இது ஒரு கிலோ இருக்குமா?”
“ஒரு கிலோ 1500 ரூவா உங்களுக்கு எவ்வளவு வேணும் சொல்லுங்க பண்ணி கொடுத்துடுவோம்”
சொல்லிவிட்டு அவர் அடுத்தடுத்த வேலைகளை பார்க்கத் தொடங்க, அடுத்த வார்த்தை எழாமல் அவளுடைய நாக்கு அடியில் ஒட்டிக்கொண்டது.
ஒன்றுமே சொல்லாமல் அவ்விடத்தை விட்டு நகரத் தொடங்கியவள், சம்பளம் குறித்து கணக்கு போடத் துவங்கினாள். என்னதான் மாங்குமாங்கென்று வேலை செய்தாலும் சம்பளம் நாலாயிரத்தை தாண்டுவதில்லை.
வாடகை, குடும்பச் செலவு, மளிகைச் செலவு என அத்தனையும் போக மிஞ்சுவதென்னவோ ஒன்றும் இல்லை.
அதிலும் வளரும் பிள்ளையை வைத்துக்கொண்டு ஒருநாளில் கறி, கவிச்சி செய்யக் கூட வக்கற்ற நிலைமையை நினைத்து கண்ணீர் சிந்துவதுண்டு.
பெண்களுக்கான இலவச பேருந்துக் கட்டணம் மட்டும் மிஞ்சிப் போவது அவளுக்கு உதவியாக இருந்தது.
அதுவும் நேரம் தப்பி வரும் வேளைகளில் தனியார் பேருந்தில் செல்லும் சூழலில் அதுவும் போய்விடும். அப்படி இருக்கையில் ஒரு கேக்குக்காக அந்த பணம் அவளுக்கு ஆடம்பர செலவாக தோன்றியது.
அதுவும் வகுப்பில் வெட்ட வேண்டுமானால் ஒரு கிலோ நிச்சயமாக பத்தாது. இரண்டு கிலோவாவது வாங்க வேண்டும்.
கிட்டத்தட்ட அவளுடைய முழு சம்பளமும் கேக்கிற்குப் போய்விட்டால் அந்த மாதம் சாப்பிடுவதே கஷ்டமாகும் சூழலை எண்ணிக்கொண்டே செய்வதறியாது வீடு வந்து சேர்ந்தாள்.
அடுத்த நாள் கட்டிங் பணியிலிருந்தவள் மனதில் உதிரன் கேட்டதை எப்படி வாங்குவது என்பது குறித்த சிந்தனையே ஓடிக்கோண்டிருந்தது.
ஆசை ஆசையாய் அவன் கேட்ட ஆடையை வாங்கிச் செல்ல வேண்டும். முதலாளியம்மாவிடம் முன்பணம் கேட்க வேண்டும். அண்ணாச்சியிடம் அரைகிலோ கேக் ஐந்நூறு ரூபாய்க்கு கேட்க வேண்டும் எண்ணிக் கொண்டே துணிகளை வெட்டிக் கொண்டிருந்தவளின் கத்திரிக்கோல் எப்படி நடுவில் இழுத்தது என்று அவளுக்கு தெரியவில்லை.
நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை கண நேரத்தில் ஆரி ஒர்க் நிறைந்த திருமண ஆடையின் நடுவில் வெட்டுப்பட்டது.
எண்ண ஆகப்போகுதோ என்று நடுங்கிக் கொண்டிருக்கும்போதே முதலாளியம்மா பார்த்துவிட்டாள். அடுத்த நொடி கர்ணகொடூமாக மாறியது அவள் முகம்.
தேன்மொழிக்கு மயக்கம் வராதகுறை. டேபிளை ஆதரவாக பற்றிக் கொண்டாள். என்னசொல்லி கத்துகிறாள் என்பதைக்கூட உள்வாங்க முடியவில்லை.
தலை குனிந்து நின்றவளை தரதரவென இழுத்துக்கொண்டு வந்து வெளியே தள்ளினாள் முதலாளியம்மா.
வெகு நேரம் வெளியிலேயே நின்று செய்வதறியாது அழுது கொண்டிருந்த தேன்மொழி மீது அவருடைய கைப்பை வந்து விழுந்தது. அவள்தான் வீசியிருக்க வேண்டும்.
உலகமே தன்னைக் கைவிட்டது போலிருந்தது. முதலாளியம்மாவும் பாவம் என்ன செய்வாள், திருமண ஆடை வேறு, தேன்மொழி உள்ளுக்குள் கலங்கினாள்.
மகனுக்காக பிளாக் பாரஸ்ட் கேக் வாங்கக் கனவு கண்டவளை அடுத்த நாள் உணவிற்குக் கூட கையேந்தும் வகையில் நடுத்தெருவில் நிக்க வைத்தது காலம். உலகமே கருங்காடாக மாறி தன்னை மூழ்கடிப்பது போல தோன்றியது.
வழக்கமாக தேநீர் அருந்தும் கடையில் கூட நிற்காது அவமானத்தில் குறுகியபடியே நடந்தாள். அழுதழுது சிவந்த அடிபட்ட கண்களோடு தலையை நிமிர்த்தாமல் பேக்கரியைக் கடந்து பேருந்தில் ஏறி அமர்ந்தாள். அவளைத் தாண்டி கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது.
காத்திருக்கும் மகனிடத்தில் என்ன சொல்லப் போகிறோம் என்று கையைப் பிசைந்து கொண்டே ஜன்னல் வழி பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்கள் எதார்த்தமாய் நெடுஞ்சாலையோரம் இருந்த அந்த மதுபான கடையை நோக்கியது.
ஆண்கள் கூட்டம் அடித்துப்பிடித்து மது வாங்க முண்டியடிக்க, கூட்டத்தில் ஒரு பச்சைநிற ஐநூறு ரூபாய் நோட்டை நீட்டிக் கொண்டிருந்த கை பரிச்சயமாய் தோன்ற ஏறிட்டுப் பார்த்தவளுக்கு தெரிந்தது அந்தக் கைக்குச் சொந்தகாரன் உதிரனின் தந்தை.
உறைந்து பார்த்துக்கொண்டிருந்தவளோடு பேருந்து நகரத்தொடங்கியது.
– சுமித்ரா சத்தியமூர்த்தி