மிட்டாய்ப் பருவம்!

பிரதீபா சந்திரமோகன்

சிறுகதை:

“ஏய் என்னடி பஞ்சாயத்து? எப்போ பாரு இந்த ஆணாதிக்க சமூகம், பெண்ணுரிமைன்னு பேசிக்கிட்டே இரு… சத்யா! சத்யா..!! உன்ன தான்…!!” என்ற ரூபா தன் வாய்க்குள் “கல்லு மாதிரி உட்கார்ந்துருக்கு பாரேன்” என்று முணுமுணுத்தாள்.

இவள் பேச்சுகளை காதில் வாங்காமல் தூரத்தில் செல்லும் பையன்களை முறைத்துக்கொண்டே அமர்ந்திருந்தாள் சத்யா.

அவர்கள் சென்ற பின்தான் இவள் பக்கமே திரும்பினாள்.

“என்னடி ஏதோ பேசிக்கிட்டு இருந்த போல” என்றாள் சாதாரணமாக.

“நான் பேசுறது எதுவுமே உனக்கு காதுல விழலல்ல…? கேட்டிருந்தா மட்டும் உன் மண்டையில ஏறி இருக்கவா போகுது…!! நீ உன் வேலையைப் பாரும்மா..!!” என்று கடுப்பாகச் சொல்லிவிட்டுத் திரும்பினாள்.

“எனக்கு மட்டும் இல்லடி… உங்க எல்லாருக்குமே கோபம் வரணும்! பொண்ணுங்கள காலுக்கு கீழே நினைக்கிற அவன மாதிரி ஆம்பளைங்கள பார்த்தா தூக்கிப் போட்டு மிதிக்கணும்னு தோனணும்” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே…

“வாயிலேயே நாலு போடப் போறேன் பாரு. இதே மாதிரி பேசிக்கிட்டே இரு… கல்யாணம் பண்ணா நல்லா வாங்குவ” என்றாள் கடுப்பாக.

“ஏன் டி இப்பதான் நாம பன்னெண்டாவதே படிக்கிறோம். அதுக்குள்ள கல்யாணம் அது இதுங்கிற… முதல்ல எனக்கு கல்யாணம் பண்ற நினைப்பே இல்லை…

அடிமையாவா டி வாழச் சொல்ற…?? நான் எப்பவுமே தனியா ஒரு பட்டாம்பூச்சி மாதிரி சுத்திப் பறந்துக்கிட்டே இருப்பேன்…” என்றாள் புன்னகைத்துக் கொண்டு வானத்தைப் பார்த்தபடி.

“கனவு கண்டுகிட்டே இரு… உனக்கு தான் முதல்ல கல்யாணமாகும்..” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள் ரூபா.

அப்போது கையைப் பிசைந்து கொண்டே ஓய்வறையிலிருந்து வெளிவந்தாள் ரத்னா.

இந்த ரத்னாவுக்கு காதல் கடிதம் வந்து அதனால் வந்த மோதலில் தான் இன்று சத்யாவை ஒருவன் திட்டினான். “பொம்பள புள்ள மாதிரி இரு… பஞ்சாயத்து பண்ற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம்” என்று.

“என்ன ரத்து..!! என்ன ஆச்சு..!!” என்று இங்கிருந்தே கத்தினாள் சத்யா. அங்கே நின்றிருந்த ரத்னாவின் முகத்திலோ எதுவும் சொல்ல முடியாத பாவனை.

மிகவும் குறுகியபடி வந்தாள். மறுபடியும் அதற்கு, “இவ ஒருத்தி” என்று பல்லைக் கடித்தாள் ரூபா. அவளுக்கும் சத்யா மீது நிறைய அன்பு உண்டுதான்.

ஆனால், இந்த முன்கோபமும் ஆண்களின் மீது அவள் காட்டும் வெறுப்பும் ரூபாவுக்கு அச்சத்தைத் கொடுக்கும். எங்காவது வம்பிழுத்து விடுவாளோ என்று தான் சத்யாவை திட்டுவாள்.

ரத்னா வந்து இவள் காதில் ஏதோ சொல்ல, “இதுக்கெல்லாமாடி பயப்படுவாங்க.. நான் போறேன்” என்று எழுந்து சென்றாள்.

ரூபா அவளிடம் “ஏய் என்னடி சொல்லித் தொலைச்ச… அவ பாட்டுக்கு எந்திரிச்சு உள்ள போறா” என்று மீண்டும் படபடத்தாள்.

“ஒன்னும் இல்லடி எனக்கு ஒன்னு தேவைப்பட்டது. அதான் சொன்னேன்..” என்றாள் தலை குனிந்திருந்த ரத்னா.

“நீ எதையும் அவ கிட்ட தான் முதல்ல சொல்லுவியா… போறத பார்த்தாலே எனக்கு பயமா இருக்குடி…” என்றாள் வகுப்பறைக்கு வெளியே எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ரூபா.

அவர்கள் பள்ளி இருபாலரும் படிக்கும் பள்ளி. மாணவர்களும் மாணவிகளும் பேசிக்கொள்ளக் கூடாது என்று தடை எதுவுமில்லை. ஆனால் பேசிக் கொண்டதில்லை.

இவர்கள் வகுப்பில் நூறு பேர். மாணவர்கள் பாதி மாணவிகள் பாதியென்று இருந்தாலும், உணவு இடைவேளையின் போதும் மற்ற ஓய்வு வகுப்புகளிலும் மாணவிகள் உள்ளே இருக்காமல் வேறு வகுப்புக்கு அல்லது வராண்டாவிற்கு வந்து விடுவார்கள்.

அது எழுதப்படாத விதியாக இருந்தது. கவனச் சிதறலை தடுப்பதற்கேன்றோ, இருபாலருக்கும் தேவையின்றி ஏற்படும் சச்சரவுகளைத் தவிர்பதற்கென்றோ காரணம் பல சொல்லப்பட்டது.

புத்தகப் பைகள் உள்ளேயே இருக்கும். தேவையானவற்றை முன்பே எடுத்து வந்துவிட வேண்டும். ஆசிரியர்கள் வந்தபின் பெண்கள் வகுப்பறைக்குள் செல்வார்கள்.

மாணவிகள் ஏதேனும் அவசரமென்றால் உள்ளே செல்வதற்குத் தயங்கித் தயங்கி தான் செல்வார்கள்.

ஏனெனில் தனியாக உள்ளே ஓரிருவர் வந்தால் மாணவர்கள் கேலிக் கூச்சல் போடுவார்கள்.

பெரும்பாலும் அந்த கூச்சல்கள் ஏதாவது ஒரு மாணவன் பெயர் சொல்லியோ அல்லது உள்ளே வரும் மாணவியின் பட்டப் பெயராகவோ இருக்கும்.

இது பருவ வயதின் கோளாறு தான் என்றாலும், சிலரால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது சத்யாவை போல, ரத்னாவைப் போல…

ஆண்களுக்கு நடுவிலே செல்லவே அஞ்சி நடுங்கும் ரத்னாவுக்கு இந்த கூச்சல்கள் நடுக்கத்தையும் தன் பெயரை ஒருவனுடன் சேர்த்து சொல்லும் போது மனதில் அவமானத்தையும் கொடுக்கும்.

ஆனால் சத்யாவுக்கு…! அதுவும் அவள் பெண்களுக்கான மாணவப் பிரதிநிதி வேறு.

சிலர் அதை நகைச்சுவையாகவும் எடுத்துக் கொண்டு வந்து விடுவார்கள். ஆனால் உள்ளே சென்றிருப்பது சத்யா..!! சத்தியமாக என்ன நடக்கப் போகிறது என்று ரூபாவுக்கு புரிந்து விட்டது.

“ஏற்கனவே அவ காண்டுல இருக்கா… இன்னைக்கு எவன் மாட்ட போறான்னு தெரியல” என்று தனக்குள் புலம்பினாள்.

உள்ளே சென்று வெளியில் வெற்றிப் புன்னகையோடு வந்த சத்யா, ரத்னாவின் கைகளில் சானிட்டரி நாப்கினை வைத்தாள்.

ரூபா வாசலுக்குச் சென்று எட்டிப் பார்த்தபோது, அவர்கள் வகுப்பிலிருந்த நான்கைந்து பேர் சத்யாவை அதிர்ச்சியாகப் பார்ப்பது தெரிந்தது.

அடுத்த வகுப்பறையில் இவர்கள் இருந்தார்கள்.

மாணவர்களின் முகத்தைப் பார்த்து குழம்பி, “என்னடி பண்ணிட்டு வந்த..?” என்று கேட்டாள் சத்யாவிடம்.

“ரூல்ஸ் எதுக்கு வந்திருக்கா..? ரூல்ஸ் எதுக்கு வந்திருக்கான்னு கத்துனானுங்க டி. எனக்கு நாப்கின் எடுத்துட்டு போலாம்னு வந்தேன்னு சொல்லிட்டேன்” என்று சொல்லிவிட்டு எதுவுமே நடக்கவில்லை போல முகத்தை வைத்துக் கொண்டாள்.

இப்போது அதிர்ச்சியாக நிற்பது ரூபாவின் முறையானது. “என்னடி.. இப்படி பண்ணிட்டு வந்திருக்க. இதெல்லாம் பசங்க கிட்ட சொல்லலாமா..??” என்றாள் அதே முகத்தோடு.

“என்ன ஆகப்போகுது..? இப்படி தனியா வரப்போ கத்துறது பொண்ணுங்களுக்கு எவ்வளவு கஷ்டம்ன்னு புரியனும்.. போடி இதுக்கெல்லாம் பயந்த மாதிரி மூஞ்ச வச்சுக்காத” என்றவள்,

“நாம இந்த மாறுற உடம்பு அமைப்பையும் புதுசா வந்த பீரியட்சையும் ஏத்துக்கவே எவ்ளோ காலம் கஷ்டப் படுறோம். அதுல இவங்க பண்ற கடுப்ப வேற சமாளிக்கனும்.. ஸ்ஸப்பா..” என்று தலையாட்டி இல்லாத நெற்றி வியர்வையை சுட்டு விரலால் வழித்துக் கொண்டாள்.

“இல்லடி அது வந்து…” என்ற ரூபாவை “அமைதியாகு” என்று சைகை செய்தவள் அன்றைக்கு தேர்விற்கான புத்தகத்தை எடுத்து படிக்கலானாள்.

இன்னும் தன்னையே பார்த்தவளைப் புன்னகையுடன் நோக்கியவள், “நம்ம வயசு பசங்க, பொண்ணுங்களை கிப்ட் பேப்பர் சுத்தின சாக்லேட் போலவே பாப்பாங்க. அதுக்கு முக்கிய காரணம் சினிமா.

பொண்ணும் உன்னைப் போல மனுசப் பிறவி தான்னு உடைச்சு பேசாத வரை, நாமளா புரிய வச்சாதான் உண்டு” என்று முதல் மதிப்பெண் வாங்கும் ரூபாவின் மனதில் எதையோ ஊன்றி வைத்தாள் சுமாராகப் படிக்கும் சத்யா.

You might also like