தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மதுரை மேற்குத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அப்பகுதி தவெகவினர் ஒட்டியுள்ள போஸ்டர் அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
எம்ஜிஆர் நின்று வெற்றி பெற்ற மதுரை மேற்கு தொகுதி விஜய்க்கு கை கொடுக்குமா?
அரசியலில் மதுரை சென்டிமென்ட்
சட்டமன்ற தேர்தல்களில் மதுரை மிக முக்கியமான இடமாகப் பார்க்கப்படுகிறது. மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் அதிக இடங்களில் வென்ற கட்சி மட்டுமே இதுவரை ஆட்சி அமைத்திருக்கிறது.
குறிப்பாக மதுரை மேற்கு தொகுதியில் 1980-ம் ஆண்டு அதிமுக சார்பில் எம்ஜிஆர் நின்று வெற்றி பெற்றார். அந்த ஆண்டு அதிமுக ஆட்சி அமைத்து, அவர் முதலமைச்சரும் ஆனார்.
அதேபோல் 2011, 2016 மற்றும் 2021 என அடுத்தடுத்து 3 முறை அந்தத் தொகுதியில் வெற்றி பெற்று நீண்ட காலமாக அதிமுகவின் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏவாக இருக்கிறார்.
மறுமுனையில், திமுகவின் முக்கிய தலைவர்களான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் மூர்த்தி, பொன். முத்துராமலிங்கம் உள்ளிட்டோரும் இந்தத் தொகுதிதான்.
இதுமட்டுமின்றி வரலாற்றில் காமராஜர் காங்கிரஸ் குழு தலைவரானதும், ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆசையைத் தூண்டியதும், விஜயகாந்த் கட்சியை அறிவித்ததும், டிடிவி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் தங்கள் அரசியல் சின்னங்களை அறிவித்ததும் மதுரையில்தான்.
இதனாலேயே தமிழ்நாட்டின் கட்சிகளுக்கு மதுரை சென்டிமென்ட் நிறைந்த தொகுதியாகப் பார்க்கப்படுகிறது.
கொளுத்திப் போட்ட போஸ்டர்
இந்த நிலையில் தற்போது மதுரை மேற்குத் தொகுதியில் தவெகவினர் ஒட்டியுள்ள போஸ்டர் பேசுபொருள் ஆகியிருக்கிறது.
மதுரையைத் தளபதி கோட்டை என்று குறிப்பிட்டுத் தவெகவினர் ஒட்டிய போஸ்டரில் “ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக முதல்வராக்கிய மதுரை மேற்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை தவெகவினர் கூறும்போது “மதுரை மக்கள் ஒருவர் மீது அன்பு வைத்துவிட்டால் அது மாறாது. இந்தமுறை மதுரை மக்களால் விஜய் முதலமைச்சர் ஆவது உறுதி” என உணர்வு பொங்கத் தெரிவிக்கின்றனர்.
விஜய்யும் மதுரையும்
விஜய்யின் மதுர, கில்லி, வேலாயுதம் போன்ற திரைப்படங்கள் மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டபோது மதுரை மக்களுடன் மிக அன்போடு பழகியதாகத் தொண்டர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக ‘வேலாயுதம்’ படப்பிடிப்பின்போது மதுரை புதூரில் ஒரு லட்சம் பேர் கூடியது மறக்க முடியாதது என்கின்றனர் மதுரை தவெக தொண்டர்கள்.
இதனாலேயே விஜய்க்கு மதுரை மக்களிடையே செல்வாக்கு அதிகம் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
உண்மை நிலவரம் என்ன?
மதுரையில் முக்குலத்தோர், சௌராஷ்டிர மக்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இவர்கள் மத்தியில் விஜய்க்கு நல்ல பெயரே இருப்பதாகத் தெரிகிறது. இதனால் மதுரையில் விஜய் களமிறங்கினால் கடும் போட்டியாக இருக்கும்.
ஒருபுறம் அமைச்சர் மூர்த்தி தலைமையில் திமுகவினர் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இன்னொரு பக்கம் 3 முறை எம்.எல்.ஏவாக உள்ள செல்லூர் ராஜூவின் செல்வாக்கு மிரட்டுகிறது.
இதற்கிடையில் விஜய் களம் கண்டால் அவருக்கு உண்மையான கள அரசியலின் அனுபவம் கிடைக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
விஜய்யின் எம்ஜிஆர் ரெபரென்ஸ்
ஆரம்பகாலம் முதலே தமது திரைப்படங்களில் தொடர்ச்சியாக எம்ஜிஆரையும் ரஜினியையும் குறியீடாக வைத்து வந்துள்ளார் நடிகர் விஜய்.
வசீகரா படத்தில் திரையில் எம்ஜிஆரே தோன்றி விஜய்க்கு வாழ்த்துரைப்பதுபோல் அமைக்கப்பட்டிருக்கும்.
மேலும் பல படங்களில் எம்ஜிஆரின் மேனரிசங்களை விஜய் செய்து வந்தார். மெர்சல் படத்தின் முதற்காட்சியில்கூட எம்ஜிஆர் படங்கள், எம்ஜிஆர் பாடல் என்றுதான் விஜய் தொடங்குவார்.
இசை வெளியீட்டு விழா மேடைகளிலும் எம்ஜிஆர் பற்றிக் குட்டிக் கதைகளைப் பேசியே விஜய் உரையாற்றி வந்தார்.
இதோ, கடைசியாக நடிக்கப்போகும் ஜனநாயகன் பட போஸ்டரில் கூட எம்ஜிஆர் பாணியில் சாட்டையைச் சொடுக்கி நான் ஆணையிட்டால் என்று கிளம்பியுள்ளார் விஜய்.
திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வரும் அனைவருக்கும் எம்ஜிஆர் முன்னோடி என்றாலும், விஜய்யின் பற்று, எம்ஜிஆர் பொதுக்கூட்டம் நடத்தி பணம் திரட்டிய திருச்சியில் முதல் மாநாட்டை நடத்தலாம் என்று யோசிக்கும் அளவு போனது.
அது நிறைவேறவில்லை என்றதும் மதுரையில் நடத்தலாம் என்று யோசித்திருக்கிறார்.
பின்னர் அதுவும் ஈடேறாமல்தான் முதல் மாநாடு விக்ரவாண்டியில் நடத்தப்பட்டது. இதனாலேயே எம்ஜிஆர் நின்று வெற்றிபெற்ற மதுரை மேற்குத் தொகுதி மீது விஜய்க்கு கூடுதல் ஆர்வம் என்கின்றனர் விமர்சகர்கள்.
இவ்வளவு ஏன், கட்சி தொடங்கியதிலிருந்து விஜய் பேசிவரும் உரைகளில் அதிமுகவை அவர் சாடுவது மிக மிகக் குறைவு என்கின்றனர்.
இதெல்லாம் எம்ஜிஆரின் அபிமான வாக்குகளை விஜய் தன் பக்கம் ஈர்க்க நினைக்கும் உத்தி என்றும் கூறப்படுகிறது.
எம்ஜிஆர், மதுரை சென்டிமென்ட் என்று புது அஸ்திரத்தைக் கையில் எடுத்திருக்கும் விஜய்க்கு இவை வேலைக்கு ஆகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
– அரவிந்த் குமார், ஊடகவியலாளர்.
நன்றி: டி.என். டாக்ஸ்