பல ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தை சந்தித்த எஸ்.ஜே. சூர்யா!

இன்றைய தினம் பல இயக்குநர்களால் விரும்பப்படும் வில்லன் நடிகர் எஸ்.ஜே. சூர்யா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு பட உலகிலும் அவர் ‘பிஸி’. சினிமாவில் இயக்குநராக கால் பதித்த சூர்யா, இப்போது நடிப்பதையே முழு நேரத் தொழிலாக கொண்டுள்ளார்.

அவர் இயக்கிய முதல் படம் ‘வாலி’. ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித், இரட்டை வேடங்களில் நடித்த இந்தப் படம் நல்ல விமர்சனத்தைப் பெற்றதோடு வசூலும் குவித்தது.

இதனைத் தொடர்ந்து விஜய் ஹீரோவாக நடித்த ‘குஷி’ படத்தை டைரக்டு செய்தார். அதுவும் சூப்பர் ஹிட்.

தனது மூன்றாவது படமான ‘நியூ’ படத்தில் நாயகன் வேடம் ஏற்றார், சூர்யா. அந்தப் படம் நன்றாக ஓடினாலும், அவர் ஹீரோவாக நடித்த அடுத்த படங்கள் தோல்வி அடைந்தன.

இதனால் வில்லன் அவதாரம் எடுத்தார். எல்லாப் படங்களும் ஓடின. எனவே இயக்குநர் தொழிலுக்கு மூட்டை கட்டி வைத்து விட்டு, வில்லன் வேடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அண்மையில் அஜித்தை படப்பிடிப்புத் தளம் ஒன்றில் சந்தித்துப் பேசியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா. அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்களை, எஸ்.ஜே.சூர்யா, தனது ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“எனது வழிகாட்டி அஜித்தை, பல ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்தேன்.. மகிழ்ச்சியான தருணம்” என அதில் பதிவிட்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

1999-ம் ஆண்டு வெளியான ‘வாலி’ படத்தில் அஜித்தும், எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்தாலும் இருவருக்கும், அதற்கு முன்பே பழக்கம் உண்டு.

அஜித் நடித்த ‘உல்லாசம்’ மற்றும் ‘ஆசை’ ஆகியப் படங்களில் எஸ்.ஜே.சூர்யா, உதவி இயக்குநராக வேலைப் பார்த்துள்ளார். அப்போதே இருவருக்கும் அறிமுகம் உண்டு.

ரகுவரனுக்குப் பிறகு தனித்துவ வில்லனாக உருவெடுத்துள்ள எஸ்.ஜே.சூர்யா, அஜித்தின் அடுத்த படத்தில், அவருக்கு வில்லனாக நடிக்கலாம் என கோடம்பாக்கத்தில் செய்தி உலா வருகிறது.

– பாப்பாங்குளம் பாரதி.

You might also like