இரண்டு வரியில் காதலைச் சொல்ல முடியுமா?

கண்டிஷன் போட்ட இயக்குனர்; கண்ணதாசன் கொடுத்த மாஸ் ஹிட்!

தமிழ் சினிமாவின் புதுமை இயக்குனர் என்று பெயரேடுத்தவர் ஸ்ரீதர். எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஸ்ரீதர், இயக்கத்தில் 1967-ம் ஆண்டு வெளியான படம் நெஞ்சிருக்கும் வரை.

சிவாஜி கணேசன், முத்துராமன், கே.ஆர்.விஜயா, கீதாஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ளார்.

படத்திற்கு ஒரு பாடல் வாலி எழுத மற்ற அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியுள்ளார்.

பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், 1967-ம் ஆண்டு வெளியான வெற்றிப்படங்களில் ஒன்றாக நெஞ்சிருக்கும் வரை இடம் பிடித்திருந்தது.

இந்த படத்தில் வரும் ‘’முத்துக்களோ கண்கள்’’ என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது,

சிவாஜி கணேசன் துளிகூட மேக்கப் இல்லாமல் நடித்திருந்த இந்த பாடலை, கம்போசிங் செய்யும்போது சுட்சிவேஷனை விளக்கி சொன்ன இயக்குனர் ஸ்ரீதர், இந்த இடத்தில் காதலை 2 வரிகளில் சொல்ல வேண்டும் என்று கவியரசர் கண்ணதாசனுக்கு கண்டிஷன் போட்டுள்ளார்.

அதை ஏற்றுக்கொண்ட கண்ணதாசன் யோசிக்கவே இல்லாமல், முத்துக்களோ கண்கள், தித்திப்பதோ கண்ணம் என்று கூறியுள்ளார்.

இதை கேட்ட ஸ்ரீதர் என்ன கவிஞர் இப்படி சொல்லிவிட்டார் என்று, பிடிக்காத மாதிரி ரியாக்ஷன் கொடுக்க, அடுத்த வரியில், கண்ணதாசன், சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை என்று அடுத்த 2 வரிகளை கூறியுள்ளார்.

இதைக் கேட்ட ஸ்ரீதர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார். அவருக்கே ஷாக் கொடுக்கும் விதமாக, அருகில் எழுதிக் கொண்டிருந்த கண்ணதாசனின் உதவியாளர் மதுரை ஜி.எஸ்.மணி கண்ணதாசனின் காலில் விழுந்து வணங்கியுள்ளார்.

இந்தத் தகவலை கண்ணதாசனின் மகன் கோபி கண்ணதாசன், ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ள நிலையில், டி.எம்.சௌந்திரராஜன் பி.சுசீலா இணைந்து பாடிய இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

நன்றி : தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்

You might also like