அன்பு செலுத்த நேரம் ஒதுக்குவோம்!

வேதாத்திரி மகரிஷி வாழ்ந்து உணர்த்திய வரிகள்…

  • ஆசையின் இயல்பறிந்து அதை நலமே விளைவிக்கத் தக்க வகையில் பயன்படுத்தி ஒழுங்குபடுத்துவிட்டால் அதுவே ஞானமாகவும் மலரும்.
  • வாழ்க வளமுடன் என ஒருவருக்கொருவர் வாழ்த்தும்போது பலவீனம் நீங்குவதோடு, வளர்ச்சிக்கான கதவும் திறக்கப்படுகிறது.
  • பேச்சிலும் நடத்தையிலும், பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையற்ற மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து, அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.
  • புன்முறுவல் காட்டவும் அன்பு செலுத்தவும் நேரம் ஒதுக்குங்கள்.
  • பிரச்னைகள் ஏற்படும்போது மற்றவர்கள் முதலில் இறங்கி வர வேண்டும் என காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள். யாரையும் ஒப்பிடாதீர்கள்.
  • எல்லோரிடமும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
  • கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.
  • மனம் திறந்து பேசுங்கள்.
  • அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள்.
  • உங்களுடைய கருத்துகளில் பிடிவாதமாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.
  • மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள். தயக்கத்துடனும் பயத்துடனும் பேசாமலும் இருக்காதீர்கள்.
  • மற்றவர் கருத்துகளை, செயல்களை, நிகழ்ச்சிகளையும் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.
  • உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கு கேட்டதை அங்கு சொல்வதையும் அங்கு கேட்டதை இங்கு சொல்வதையும் விடுங்கள்.
  • எல்லாவற்றிலும் திருப்தி முக்கியம். அதனால், தேவைக்கு அதிகமாய் ஆசைப்படாதீர்கள்.
  • அர்த்தம் இல்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டே இருப்பதை விடுங்கள்.
  • சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துதான் ஆக வேண்டும் என்பதை மனதார உணருங்கள்.
  • மற்றவர்களுக்கு மரியாதை காட்டவும், இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
You might also like