ஆசிரியரை அசர வைத்த மாணவன்!

நாட்டின் முதல் குடியரசுத் தலைவரான டாக்டர்.ராஜேந்திர பிரசாத் அவர்கள், 1884 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 3 ஆம் நாள் பீகார் மாநில சிவான் மாவட்டத்திலுள்ள செராடெ என்ற இடத்தில் மகாவீர சாகிக்கும், கமலேசுவரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார்.

1907 ஆம் ஆண்டு, கொல்கத்தா பிரிசிடன்சி கல்லூரியில் பொருளியல் துறையில் சேர்ந்தார். கல்வியில் சிறந்து விளங்கிய அவர், எம்.ஏ முதுகலைப் பட்டபடிப்பில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார்.

இவர் சட்டக் கல்லூரியில் பயின்றபோது, அவரது விடைத்தாள்களை திருத்திய ஆசிரியர் ஒருவர், “இந்த விடைத்தாளை எழுதியவன் என்னை விடத் திறமைசாலி” எனத் தேர்வுத்தாளில் குறிக்கும் அளவுக்கு சிறந்த மாணவனாக விளங்கினார் ராஜேந்திர பிரசாத். பின்னாளில் சட்டக் கல்விப் பயின்று அதில் தங்கப் பதக்கமும் பெற்றார். சட்டத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.

அதன்பின் கொல்கத்தாவில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றிய அவர், 1916 ஆம் ஆண்டு பாட்னாவிற்கு இடம்பெயர்ந்து, பீகார் மற்றும் ஒரிசா மாநிலங்களுக்கான உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

இதையடுத்து அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராக சேர்ந்த அவர், தன்னுடைய வழக்கறிஞர் பணியைத் துறந்து, மகாத்மா காந்தியின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு ஒத்துழையாமை இயக்கத்திலும் சேர்ந்தார்.

மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைவராகப் பொறுப்பேற்ற அவர், 1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் கலந்துகொண்டு கைதுசெய்யப்பட்டு மூன்றாண்டு சிறை தண்டனையும் பெற்றார்.

ஜூன் 15, 1945 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட டாக்டர் ராஜேந்திர பிரசாத், 1946 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு அவைத் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த இரண்டரை ஆண்டுகளுக்கு பின், 1950 ஆம் ஆண்டு இந்தியா முழு குடியரசு நாடாக மாறியது. அப்போது இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற டாக்டர் ராஜேந்திர பிரசாத், 1950 முதல் 1964 வரை தன்னுடைய பணியை சிறப்பாக செய்தார்.

இந்தியக் குடியரசு தலைவர்கள் வரலாற்றில் அப்பதவியை இரண்டுமுறை அலங்கரித்த ஒரே குடியரசுத் தலைவர் என்ற பெருமையும் பெற்றார்.

ஒருமுறை பத்ம விருதுகள் பெறுவோருக்கான பட்டியலை தயார் செய்த பிரதமரும், உள்துறை அமைச்சரும் இறுதிப் பட்டியலை குடியரசுத் தலைவர் டாக்டர்.ராஜேந்திர பிரசாத்துக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது பட்டியலை சரிபார்த்த ராஜேந்திர பிரசாத், தென் மாநிலத்தைச் சேர்ந்த செல்வி லாசரஸ் என்று ஒரு பெயரை அதில் சேர்க்குமாறு கூறி அந்தப் பட்டியலில் லாசரஸின் பெயரையும் அவரே கைப்பட எழுதினார்.

அப்போது யார் இந்த லாசரஸ் என்று யாருக்கும் தெரியாததால், சென்னையில் லாசரஸ் என்ற பெயரில் ஒரு கல்வியாளர் இருப்பதை கண்டறிந்து அவருக்கு விருது வழங்க உள்ளதாக தகவலும் தெரிவிக்கப்பட்டது.

இறுதியில் திருத்தப்பட்ட பட்டியலை சரிபார்த்த ராஜேந்திர பிரசாத்து, இந்த லாசரஸ் கல்வியாளர் இல்லை என்றும் அவர் ஒரு செவிலியர் என்றும் கூறி திருப்பி அனுப்பினார்.

இதனால் குழப்பம் ஏற்பட்டது. அப்போது ராஜேந்திர பிரசாத்தின் உதவியாளர், “ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து ஹைதராபாத்துக்கு ராஜேந்திர பிரசாத் பயணித்தபோது உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது செவிலியர் லாசரஸ்தான் அவருக்கு பல உதவிகளைச் செய்து உடல் நலக்குறைவை சரி செய்தார்” என்று கூறினார்.

இதையடுத்து சென்னை லாசரஸுக்கும், ஆந்திர செவிலியர் லாசரஸுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இந்திய அரசு 1962-ம் ஆண்டு மே-13-ம் தேதி இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்கி கவுரவித்தது.

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான இராசேந்திர பிரசாத் 1963-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ம் தேதி காலமானார்.

You might also like