உதயநிதிக்கு அன்றே வாழ்த்துச் சொன்ன கலைஞர்!

பொதுவாழ்வு பூங்கா விநோதமல்ல – என்ற தலைப்பில் கலைஞர் சொன்ன வாழ்த்து.

உதயநிதி பிறந்தபோது கலைஞர் கைதாகி சென்னை மத்தியச் சிறையில் இருந்த நேரம். இந்திரா காந்திக்குக் கறுப்புக்கொடி காட்டிய போராட்டத்தில் கைதாகி அவர் சிறையிலிருந்த போது தான் மு.க.ஸ்டாலினுக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தி தெரிய வந்தது.

28.11.1977 அன்று சிறையிலிருந்து கலைஞர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் இதோ :

“உனக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தி கேட்டு மகிழ்ச்சி. சாந்தாவுக்கு என் வாழ்த்துகளைக் கூறவும்.

1953-ல் திருச்சி சிறையில் ஆறுமாதத் தண்டனை பெற்றபோது, நீ கைக்குழந்தை!
வீட்டிலிருந்து என்னைக் காண வருகிறவர்களோடு குழந்தையாக இருந்த நீயும் வருவாய்.

இருபத்தி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னைச் சிறையில் மிசாக் கைதியாக (1976) ஓராண்டு நீ இருந்தபோது, நான் உன்னைக் காண வந்து கொண்டிருந்தேன்.

உன்னுடனும், கழக உடன்பிறப்புகளுடனும், தம்பி மாறன் மிசாக் கைதியாக இருந்தபோது அவனுக்கோர் பெண் பிறந்தது. அந்தக் குழந்தையும் தன் தந்தையைப் பார்க்கச் சிறைச்சாலைக்குத் தான் வந்து கொண்டிருந்தது.

இப்போது உனக்குப் பிறந்திருக்கிற என் பேரனும் என்னைப் பார்க்கச் சிறைக்கு வருவான் என்று கருதுகிறேன். இந்த அனுபவங்கள் எவ்வளவு இனிமையானவை பார்த்தாயா?

இந்தக் குடும்பத்தில் மட்டுமல்ல, நமது இயக்கமாம் பெரிய குடும்பத்தில் எத்தனையோ உடன்பிறப்புகளுக்கு இப்படிப்பட்ட சிறை அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன.
பொதுவாழ்வு பூங்கா விநோதமல்ல! புயலை எதிர்த்து நிற்பது!

இதைப் புரிந்து கொள்ளாத சில பேர் இன்னமும் நாட்டிலே இருக்கிறார்கள். பாவம், அவர்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன்.

புதிய பேரனுக்கு என் வாழ்த்துகள்!

அன்புடன்
– மு.கருணாநிதி

You might also like