இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம்!

– தி.மு.க. அறிவிப்பு

தி.மு.க. சார்பில் நவம்பர் – 4ம் தேதியன்று தமிழகம் முழுவதும் “இந்தித் திணிப்பு எதிர்ப்புத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்கள்” நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியை நாட்டின் அலுவல் மொழியாக்குவது தொடர்பாக பாராளுமன்ற நிலைக்குழு, குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அளித்துள்ளதாக செய்தி வெளிவந்தவுடன்,

முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்தியாவிலேயே முதலாவதாக அதை எதிர்த்து கண்டன அறிக்கை வெளியிட்டார்.

திமுக இளைஞர் அணி, இது தொடர்பாக மாநிலம் முழுவதும் 15.10.2022 அன்று மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தியது. பிரதமருக்கு, இது தொடர்பாக முதலமைச்சர் 16.10.2022 அன்று கடிதம் எழுதி இந்த அறிக்கையை ஏற்க கூடாது என்று வலியுறுத்தினார்.

இந்நிலையில், அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழுத் தலைவரால் கடந்த 9.9.2022 அன்று குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் உள்ள தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும்,

அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 18.10.2022 அன்று தனித் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

அது குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தை தமிழக மக்களிடையை விளக்கிடும் வகையிலும் அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழு அறிக்கையை ஏற்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி,

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வரும் 4.11.2022 (வெள்ளிக்கிழமை) அன்று இந்தித் திணிப்பு எதிர்ப்புத் தீர்மான விளக்கப் பொதுக் கூட்டங்கள் நடைபெறும்.

திமுக மாவட்ட செயலாளர்கள் தலைமையிலும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெறும் இப்பொதுக்கூட்டங்களில் திமுக உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்று சிறப்புற நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பெரம்பலூரில் வரும் 4-ம் தேதி நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரும், அக்கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுவார்” எனக் கூறப்பட்டுள்ளது. 

You might also like