ஹீரோக்களுக்காக பாட்டெழுத சினிமாவுக்கு வரவில்லை!

-கவிஞர் சினேகன்

ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரித்துள்ள படம் ‘ஆரகன்’. அறிமுக இயக்குநர் அருண்குமார் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நடிகர் மைக்கேல் தங்கதுரை கதாநாயகனாக நடித்துள்ளார்.

இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட கவிப்பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ரீரஞ்சனி, கலைராணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் பேரரசு, சுப்பிரமணிய சிவா, கவிஞர் சினேகன், இளம் நடிகர்கள் மாஸ்டர் மகேந்திரன், சரண் சக்தி, எழுத்தாளர் பிரபாகரன் மற்றும் நடிகை கோமல் சர்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இயக்குநர் அருண்குமார் பேசும்போது, “இது எனக்கு முதல் படம்தான்.. கொரோனா காலகட்டத்தில் இந்த படத்தின் தயாரிப்பாளரை நேரில் சந்திக்க முடியாமல் வீடியோ கால் மூலமாகவே பேசி அவரிடம் சம்மதம் வாங்கினேன்.

அந்த அளவிற்கு என்னை நேரில் பார்க்காமலேயே என்மீது நம்பிக்கை வைத்து இந்தப்படத்தை தயாரிக்கும் அளவிற்கு, ஸ்கிரிப்ட் வலுவாக இருந்தது. அதனால் அவரை கடவுள் அனுப்பிவைத்த ஏஞ்சல் என்றுதான் சொல்வேன்” என்றார்.

நாயகன் மைக்கேல் தங்கதுரை, “நான் நடித்த ஊமைச்செந்நாய் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய ராஜூ மூலமாகத்தான் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது..

நான் சினிமாவில் நுழைந்து பதினைந்து வருடம் ஆகிவிட்டது. கடின உழைப்பைத்தான் தொடர்ந்து கொடுத்துவருகிறேன். அதற்கான பலன் இந்த படத்தில் கிடைக்கும் என நினைக்கிறேன்” என்றார்.

நடிகை கோமல் சர்மா, “தமிழ்நாட்டில் இருப்பவர்கள் மட்டுமல்ல. எங்கு இருந்தாலும், ஏழுகடல் தாண்டினாலும் தமிழ் பேசுபவர் எல்லாம் தமிழர்தான்.

எப்போதுமே கடல் தாண்டி வந்தவர்கள் வென்றுள்ளார்கள் என்பது சரித்திரம். அதேபோல இந்த ஆரகன் பட குழுவினருக்கும் நிச்சயம் வெற்றி கிட்டும்” என்று பாராட்டினார்.

ஒரு பாடலை மட்டும் படத்தில் எழுதியுள்ள கவிஞர் சினேகன், “இந்த படத்தின் இயக்குனர் அருண்குமார் என்னை பாடல் எழுத அணுகியபோது, படத்தின் பட்ஜெட் குறித்து பேசி எப்படியாவது என்னை சம்மதிக்க வைத்து விட வேண்டும் என முயற்சித்தார்.

என்னை பொறுத்தவரை ஐநூறு ரூபாய்க்கு பாட்டு எழுதிய போதும் சரி, தற்போது மூன்று லட்ச ரூபாய்க்கு பாட்டு எழுதும்போதும் சரி.

சினிமாவுக்குத்தான் பாட்டு எழுதி வருகிறேனே தவிர, நடிகர்களுக்காகவோ பணத்துக்காகவோ பாட்டு எழுத வரவில்லை.

பத்து படங்களில் மூன்று படங்களுக்கு பணம் வாங்காமல் தான் பாட்டு எழுதி தருகிறேன்து” என்றார்.

இயக்குநர் பேரரசு, “திருப்பாச்சி படத்தை இயக்க ஆரம்பித்த சமயத்தில் இயக்குனர் சினேகன் எனது படத்தில் பாடல் எழுத வேண்டும் என விரும்பினேன்.

அப்போது அவரிடம் சொல்வதற்காக நானே டம்மியாக சில வார்த்தைகளைப் போட்டு இப்படித்தான் பாடல் வேண்டுமென எழுதி வைத்திருந்ததை அவரிடம் காட்டினேன்.

அதை பார்த்துவிட்டு இந்தப்பாட்டே நல்லா தான் இருக்கு என்று கூறி பாட்டு எழுதும் வாய்ப்பை எனக்கே கொடுத்தார். எனக்குள் இருந்த கவிஞனை வளர்த்துவிட்ட சினேக கவிஞன் அவர்.

கதாநாயகி கவிப்ரியா பார்ப்பதற்கு குடும்பப்பாங்கான அழகுடன் அழகாக காட்சியளிக்கிறார். இப்போதெல்லாம் குடும்பப்பாங்காக நடிக்கும் பல நடிகைகள் சோசியல் மீடியாவில் கவர்ச்சியாக தங்களது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கும் குடும்பப் பெண் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த கதாநாயகிகள் கவர்ச்சி பக்கம் செல்லவே கூடாது அப்படி தடம்மாறி செல்பவர்களைப் பார்க்கும்போது ரசிகர்களுக்கு வெறுப்புதான் ஏற்படும்.

உங்கள் பலமே அந்த குடும்பப் பாங்குதான். அப்படி மாறினால் அவர்களது மார்க்கெட்டே காலியாகிவிடும்” என்றார்.

You might also like