ஹீரோ, வில்லன் என்பதைவிட நடிப்புதான் முக்கியம்!

நடிகர் சரத்குமார்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடித்துள்ள நடிகர் சரத்குமார், சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், “பலராலும் பல காலம் முயற்சி செய்த பொன்னியின் செல்வனை, பல கஷ்டத்திற்கு பிறகு மணிரத்னமும், லைகா புரொடக்‌ஷனும் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

முழு நாவலையும், கதாபாத்திரங்களையும் எடுக்க நினைத்தால் அது பல பாகங்களாக போகும். மணிரத்னம் அதை சரியாக சுருக்கி, ஒரு சிறப்பான திரைப்படமாக உருவாக்கியுள்ளார்.

பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரம் பெரிய வீரன், சோழ நாட்டிற்கு கட்டுபட்டவன், நந்தினியின் மனம் புரியாத கணவன் என்ற பல அம்சங்கள் நிறைந்து இருக்கிறது.

இந்தப் படத்திற்கு என்னைத் தேர்ந்தெடுத்தற்கு நான் நன்றி கூறிகொள்கிறேன்.

மணிரத்னம் உடன் இணைந்தது பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறோம் என்று நினைக்கிறேன்.

சோழர்கள் பற்றி தெரியாமல் இருந்தவர்களுக்கு கூட, இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர்களை பற்றி தெரியவரும். சோழர்களுடைய பெருமைகளும், திறமைகளும் பல மக்களுக்கு புரியவரும்.

இனிவரும் காலங்களில் சோழர்களை பற்றி தெரிந்து கொள்ளும் சூழலை இந்த திரைப்படம் ஏற்படுத்தும்.

இந்தியாவில் தாஜ்மகாலை பார்க்க வரும் மக்கள், இனி தஞ்சை பெரிய கோவிலையும் வந்து பார்க்கவேண்டும்.

பழுவேட்டரையர் 64 விழுப்புண்களை பெற்ற மாவீரர். பொன்னியின் செல்வன் கதையை படிக்கும்போதே பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நடிப்பது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அந்த வாய்ப்பை எனக்கு அளித்த டைரக்டர் மணிரத்னத்துக்கு நன்றி.

அந்த வேடத்தில் யாரெல்லாம் நடிக்க ஆசைப்பட்டார்கள் என்று தெரியாது.

இப்போது நான் வில்லனாக நடிப்பது குறித்து கேட்கிறார்கள்.

நாயகன், வில்லன், அப்பா, அண்ணன் இதெல்லாம் கதாபாத்திரங்கள்தான்.

அதில் சிறப்பாக நடிப்பவர்கள்தான் நல்ல நடிகராக இருக்கமுடியும். தற்போது 21 படங்களுக்கு மேல் நடித்துவருகிறேன்” என்றார்.

You might also like