செயற்கைப் புருவங்கள் அழகா, ஆபத்தா?

அழகு என்பது பெண்களுக்கே சொந்தம் என்பது போல் கவிஞர்கள் மான் விழியாள், வில்போன்ற புருவம் உடையாள் என்று எத்தனையோ புராணங்கள், கவிதைகளில் வர்ணிக்கப்பட்டுள்ளது.

அழகு என்பது நடை, உடை, வடிவம் எல்லாம் தாட்டி விழியும் புருவமும் பெண்களுக்கு அழகு என்பது கூறியிருப்பார்கள். புருவத்தின் அழகையும் அடர்த்தியையும் வைத்து அழகான முகம் வடிவம் பெறுகிறது.

பெண்கள் தங்கள் அழகை எப்படி எல்லாம் பேணிக்காத்தார்கள் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன.

மின்னும் அழகை பெறுவதற்கு பால் மற்றும் தேன் கலந்து கிளியோபாட்ரா குளித்தாகவும் கூறுவார்கள்.

பண்டைய கால பெண்கள் பசு சாணம் மற்றும் கோமியம் கொண்டு முகத்தில் உள்ள பருக்கள், குதிங்கால் வெடிப்புகள் போக்க பயன்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

ஆதி காலம் தொட்டு இன்று வரை அழகினைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் என்ன வேணாலும் செய்யத் தயாராக இருக்கின்றனர்.

புருவங்கள் எல்லோருக்கும் ஒன்றுபோல் இருப்பதில்லை. அழகான பெண்களுக்கு புருவம் வடிவம் என்பது முழுமையில்லாமலும், அடர்த்தி குறைவு மற்றும் கண்ணுக்கு அருகில் இறங்கியும் பார்க்க அழகில்லாமல் இருக்கும்.

இதனை சரிசெய்ய இப்போது எல்லாம் நிபுணர்கள் நிறைய பேர் பார்லர் மற்றும் முகச் சீரமைப்பு சிகிச்சை மையங்களில் இருக்கின்றனர்.

முறையான நிபுணர்கள் கொண்டு ஒழுங்கற்ற புருவ முடி சரி செய்யப்படுகிறது.

முன்பெல்லாம் இந்த சிகிச்சை சினிமா மற்றும் பெரிய இடத்து பெண்கள் மட்டுமே செய்து வந்தார்கள்.

ஆனால், தற்போது நடுத்தர மற்றும் வேலைக்குப் போகும் பெண்களும் இந்தச் சிகிச்சையை செய்து கொள்கின்றனர்.

அது எப்படி செய்யப்படுகிறது..?

வெறும் 1 மணி நேரத்தில் மைக்ரோ பிளேடிங் மூலம் உங்களுக்கு பிடித்தமான வடிவில் செயற்கை முறையில் அழகான புருவங்களைக் கொண்டு வந்துவிடலாம். உங்கள் முகத்தின் வடிவம் மேலும் அதிகரிக்க முடியும்.

ஆண்கள் தங்கள் முடியை சீரமைக்கும் போது விக்ரம் மாதிரி தாடி, தலைமுடி வடிவமைப்பு வேண்டும், விஜய் கட் வேணும் என பார்லரில் வைத்திருக்கும் போட்டோக்களை காட்டி வெட்டிக் கொள்வது போல், தற்போது பெண்களும் தங்களுக்கு நயன்தாரா, திரிஷா, தமன்னா  போன்று புருவ முடி வேண்டும் என்று வடிவமைத்துக் கொள்கின்றனர்.

மைக்ரோ பிளேடிங் என்றால் என்ன?

முதலில் எந்த வடிவில் புருவம் வேண்டுமோ அதைத் தீர்மானித்துக் கொண்டு புருவ முடிகளை மேல், கீழ் பகுதியில் நூல் கொண்டு சீரமைத்துக் கொள்கின்றனர்.

பிறகு புருவத்தில் விருப்பமான வளைவில் வரைந்து கொள்ளப்படுகிறது. அதன் பிறகு இதற்காக உருவாக்கப்பட்ட விசேஷ மை மூலம் இடைவெளி இல்லாமல் செயற்கைப் புருவத்தை உருவாக்கி நிரப்புவார்கள்.

இப்படிப் புதிய புருவங்களை உருவாக்கும் மைக்ரோ பிளேடிங் செய்வதற்கென்று விசேஷ கருவிகள் இருக்கின்றன. அதனைப் பயன்படுத்தி மட்டுமே செய்ய முடியும். இதற்கான பயிற்சி பெற்றவர்கள் மூலமாக மட்டுமே செய்யப்படுகிறது.

தற்போது வேலைக்கு போகும் பெண்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

மைக்ரோ பிளேடிங் செய்வதற்கு முன்பு உங்களுக்கு எந்த நிறம் பொருத்தமாக இருக்கும் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். 

கருப்பு, பிரவுன், டார்க் பிரவுன், லைட் பிரவுன் போன்றவை இருக்கின்றன. உங்கள் சரும நிறத்திற்கு ஏற்ப பொருத்தப்படுகிறது.

இதனால் ஆபத்து வருமா?

இயற்கைக்கு மாறான செயல்கள் எல்லாத்திற்கும் கண்டிப்பாக எதிர்வினை இருக்கும். பாதிப்பு குறைவு என்றாலும் ஒரு சில பிரச்சினைகள் இருக்கின்றன.

முதலில் தோல் சம்பந்தமான அரிப்பு, வீக்கம், அலர்ஜி ஏற்படும்.

வளரும் இளம் பருவமான 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு இந்த சிகிச்சை செய்யக்கூடாது.

ஊசி குத்துவது போல் மெல்லிய வலி இருப்பதால் இளம் வயதினருக்கு பரிந்துரைக்கப்படவில்லை. ஒரு சிலருக்கு கண் நரம்பு பாதிப்பு ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இந்த சிகிச்சைக்கு எத்தனை மணி நேரங்கள் ஆகின்றன?

குறைந்தது ஒரு மணி நேரத்தில் இருந்து ஒன்றரை மணி நேரத்தில் மைக்ரோ பிளேடிங் செய்து விடலாம்.

நடுத்தர வயதுடைய பெண்களுக்கு புருவ முடி வளர்ச்சி குறைவதாலும், ஒரு சில உடல் உபாதைகளால் உதிர்ந்து விடுவதால் இவர்கள் அதிக அளவு இந்த சிகிச்சை செய்து கொள்வதாக கூறுகின்றனர் அழகுக்கலை நிபுணர்கள்.

செயற்கைப் புருவ முடி என்பது அழகாக இருந்தாலும் ஒரு சில ஆபத்துகள் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

-யாழினி சோமு

You might also like