பீகாரில் செல்லுபடியாகாத பாஜகவின் தந்திரம்!

பீகாரில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார், ஆளுநரைச் சந்தித்து தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதே நேரம், 160 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். மெகா கூட்டணி மூலம் மீண்டும் பீகாரில் புதிய ஆட்சியை நிதீஷ்குமார் அமைக்க உள்ளார்.

ஆளுநருடனான சந்திப்புக்கு பிறகு  செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், தனது கட்சியின் அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த முடிவு கட்சியின் முடிவு எனக் கூறினார்.

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் ஆகியவை சேர்ந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன. அந்தக் கூட்டணிக்கு மகாபந்தன் கூட்டணி எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், அந்தக் கட்சிகளின் சட்டமன்ற குழு தலைவராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, பீகாரில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரி நிதிஷ்குமார் மற்றும் தேஜஸ்விஆகியோர் ஆளுநரை சந்தித்தனர்.

160 சட்டசபை உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதால் ஆட்சி அமைப்பதற்கு அழைக்கும் படியான கடிதத்தை அவர்கள் அளித்தனர். நிதிஷ்குமார் கூட்டணிக்கு ஜித்தன்ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சியும் ஆதரவு அளித்துள்ளது.

அண்மையில் மகாராஷ்டிராவில் குழப்பம் ஏற்படுத்தி பாஜக ஆட்சியமைக்க முயன்ற மாதிரி, பீகாரிலும் பாஜக குழப்பம் ஏற்படுத்த நினைத்த நிலையில், அதற்கு நேர்மாறாக பீகார் அரசியல் நிலவரம் மாறிப்போயுள்ளது.

You might also like