பெண்களுக்கு 11 மேயர் பதவிகள்!

– நகர்ப்புற உள்ளாட்சிகளில் அரசு ஒதுக்கீடு

சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாநகராட்சிகளின் மேயர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 6 மாநகராட்சிகள் உட்பட 21 மாநராட்சிகள், 138 நகராட்சிகள், 649 பேரூராட்சிகள் உள்ளன.

ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்குத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், விரைவில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கானத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், மாநகராட்சிகளுக்கு வார்டு வரையறை செய்வது தொடர்பான இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

தற்போது மேயர் பதவிகள் இட ஒதுக்கீடு அடிப்படையில் பிரிக்கப்பட்டு, 11 மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தமிழக நகராட்சி நிர்வாகச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அரசாணையில், நகராட்சி நிர்வாக இயக்குனர் கடந்த ஜனவரி 11-ம் தேதி அரசுக்கு அனுப்பிய கடிதத்துடன், வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர் பதவிகளை இட ஒதுக்கீடு அடிப்படையில் பிரிப்பது தொடர்பான கருத்துருவை அனுப்பியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இதைக் கருத்தில் கொண்டு விதிகளில் திருத்தம் செய்து அரசாணை வெளியிடவும், அதன் அடிப்படையில், கருத்துருவைப் பரிசீலித்த தமிழக அரசு, ஆதிதிராவிடர் (பொது), ஆதிதிராவிடர் (பெண்கள்), பொது (பெண்கள்) ஆகிய பிரிவினருக்கு மேயர் பதவிகள் ஒதுக்குவதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை மாநகராட்சி மற்றும் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள தாம்பரம் மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் ஆதிதிராவிடர் பெண்களுக்கு ஒதுக்ககப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாநகராட்சியும் பட்டியலின மகளிருக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், விருதுநகர், காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு மாநகாராட்சி மேயர் பதவிகளும் பெண்களுக்கே என ஆணை பிறப்பித்துள்ளது.

ஆவடி மாநகராட்சி மேயர் பதவி ஆதிதிராவிடர் (பொது) பிரிவுக்கும், கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய 9 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள்  பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

You might also like