அரசு பணிகளில் பெண்களுக்கு 40 சதவீத இடஒதுக்கீடு!

– பிரியங்கா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் உறுதி

உத்தரப் பிரதேசத்தில் வரும் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், பெண்களை முக்கியமாக வைத்து இந்தத் தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

அந்தவகையில், பெண்களைக் கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை கட்சியின் பொதுச் செயலாளரும், மாநிலப் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி வெளியிட்டு வந்தார்.

இதன் தொடர்ச்சியாக பெண்களுக்கான தேர்தல் அறிக்கை ஒன்று தனியாக தயாரிக்கப்பட்டுள்ளது.

‘சக்தி விதான்’ என அழைக்கப்படும் இந்த அறிக்கையை வெளியிட்ட பிறகு இது குறித்துப் பேசிய பிரியங்கா காந்தி, “இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு கட்சி, பெண்களை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை வெளியிடுவது இதுவே முதல் முறை” என்றார்.

பெண்களுக்கான அந்தத் தேர்தல் அறிக்கை, சுய மரியாதை, தற்சார்பு, கல்வி, மரியாதை, பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் என 6 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

அந்தத் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், அரசுப் பணிகளில் பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். இதைப்போல காவல் துறையில் 25 சதவீதம் பெண்களுக்குப் பணி வழங்கப்படும்.

தேர்தலில் போட்டியிட 40 சதவீத டிக்கெட் பெண்களுக்கு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். தற்போது 50 சதவீதமாக உயர்த்தி இருக்கிறோம். இதன் மூலம் அரசியலில் பாலின சமத்துவமின்மையை நாங்கள் நீக்க உள்ளோம்.

50 சதவீதம் வரை பெண்களை வேலைக்கு அமர்த்தும் வணிக நிறுவனங்களுக்கு வரி விலக்கு மற்றும் உதவி வழங்கப்படும். பெண் தொழில்முனைவோருக்கு கடன், வரிச்சலுகை போன்றவை வழங்கப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பெண்களுக்கு 40 சதவீத இடஒதுக்கீடு.

ரேஷன் கடைகளை 50 சதவீத பெண்களைக் கொண்டு நடத்துதல்.

மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்கள், பட்டதாரி பெண்களுக்கு இருசக்கர வாகனம், பெண்களுக்காக 75 திறன் மேம்பாட்டு பள்ளிகள், பெண்களே நடத்தும் மாலை நேர கல்வி மையம் போன்ற திட்டங்களையும் காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like