கல்வியின் கண்களாகத் திகழ்ந்த எம்.ஜி.ஆர். அரசு!

புரட்சித் தலைவரின் பொற்கால ஆட்சி சாதனைகள் – 7

ஒரே ஆண்டில் 400 பள்ளிக்கூடங்கள் திறப்பு

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை கல்விக்கண் திறந்தவர் என்று போற்றுவார்கள். அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்டு அந்த மாமனிதரை கடைசிவரை மதித்து வந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.!

மதித்ததோடு மட்டுமல்ல பேரறிஞர் அண்ணா சொன்னதுபோல, மாற்றான்
தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற கொள்கைப்படி, அண்ணா, காமராஜரைப் பின்பற்றி லஞ்ச-லாவண்யமற்ற ஆட்சியை நடத்தியதோடு கல்விக்கு கண்களாகவும் திகழ்ந்தார் எம்.ஜி.ஆர்.

அதன்படி அவர் ஏராளமான நல்ல நல்ல திட்டங்களை கல்விக்காக செயல்படுத்தினார். அந்த விவரங்களை பார்க்கலாம்.

1981ம் ஆண்டு மட்டும் தமிழகத்தில் மேலும் 400 உயர்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டு, கல்வியறிவு மேலும் பரவலாக்கப்பட்டது.

வாடகைக் கட்டிடங்களில் இயங்கும் மாநகராட்சிப் பள்ளிகள் சொந்தக் கட்டிடங்களில் மாற்றும் திட்டமும் இத்தோடு செயல்படுத்தப்பட்டது.

இதற்காக தமிழகத்தில் 25 ஆயிரம் பள்ளிக் கட்டிடங்கள் கட்டுவதற்கு 5 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்தது.

தொடக்கப் பள்ளிகளில் நர்சரி கல்வி தொடங்கப்பட்டது. அதன்படி குழந்தைகள் காப்பகங்கள் அனைத்தும் நர்சரி பள்ளிகளாக மாற்றப்பட்டன. பள்ளிகளில் ஓவிய ஆசிரியர் பதவியின் பெயரை கலை ஆசிரியர் என்று மாற்றி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

பாலர் பள்ளிகள்

கிராமப் புறங்களில் நர்சரி பள்ளிகளை ஆரம்பிக்கலாம் என்பதனை அரசு கொள்கையளவில் ஏற்று, படிப்படியாகச் செயல்படுத்தி வருகிறது.

1982-83ம் ஆண்டில் 4, 343 நர்சரி பள்ளிகளும் 1983-84ல் 5,000 நர்சரி பள்ளிகளும் 1984-85ல் 5,000 நர்சரி பள்ளிகளும், 1985-86ல் 10,462 நர்சரிப் பள்ளிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இப்பாலர் பள்ளிகள் சிறந்த முறையில் இயங்குவதற்கு கல்வி உபகரணங்கள், விளையாட்டுக் கருவிகள் முதலியன வழங்கப்பட்டுள்ளன.

மருத்துவக் கல்லூரிகளில் புதிய இட ஒதுக்கீடு

தமிழகத்தில் மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்குவது குறித்து முதலமைச்சர் எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசு ஆலோசனை நடத்தியது.

மாநிலத்தில் மொத்தம் 8 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அங்கு சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 1,125லிருந்து 1,015 ஆக, அரசு 1971ஆம் ஆண்டு குறைத்தது.

அந்த மரபுப்படி, 1979ஆம் ஆண்டுவரை ஆண்டுதோறும் 1,015 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டார்கள்.

பல்வேறு தரப்பிலிருந்து வந்த மனுக்களின் அடிப்படையிலும் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையையும் கருத்திற் கொண்டு, கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகளுக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கான உத்தரவு 13.09.1979-ம் நாள் பிறப்பிக்கப்பட்டது.

மத்திய அரசு நியமனங்கள் 9. ஜம்மு அண்டு காஷ்மீர் மாணவர்கள் 2, நேபாளம் 2, தமிழ் நாட்டைச் சேர்ந்த மலேஷிய மாணவர்கள் 8. ஸ்ரீலங்கா, பர்மா 5. வெளிநாடுகளில் இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், ஸ்ரீலங்கா, தென் ஆப்பிரிக்கா, பிஜி 4.985 இடங்கள் இதிலே விஞ்ஞான பட்டதாரிகளுக்கு 10 விழுக்காடு. மீதி 886 இடங்கள் புதுமுக வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப் படுகின்றது.

விதவைகள் 10; உடல் ஊனமுற்றவர்களுக்கு 3; இராணுவத்திலே பணிபுரிந்து இறந்தவர்களுடைய குழந்தைகளுக்கு 6; கலப்புத் திருமண தம்பதிகளின் குழந்தைகளுக்கு 6; சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3; தமிழ்நாட்டைச் சேர்ந்த அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு 6; இதுதான் நிலை. இவ்வாறாக ட ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தொழில்கல்வியில் சாதனை

தமிழகத்தை அறிவுசார் மாநிலமாக்க புரட்சித் தலைவர் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி தொழிற்கல்விகளில் புதிய, புதிய கல்விப் பிரிவுகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் 1981-ம் ஆண்டு தொடங்கப்பட்டன.

பாலிடெக்னிக்குகளில் புதிய கல்விப் பிரிவுகள் அமைப்பது தொடர்பாக ஆராய்வதற்காக அந்த ஆண்டு நிபுணர் குழு ஒன்றை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அமைத்தார். அவர்களின் ஆலோசனையை செயல்படுத்தினார்.

உதவித் தொகைபெறும் மாணவர்கள் அதிகரிப்பு

1981-82ம் ஆண்டிற்கு முன்பு வரை மாணவர்கள் உதவித்தொகை பெற வருமான வரம்பு ரூ. 2,500 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 1981-82ம் ஆண்டிலிருந்து வருமான வரம்பை ரூ. 5000 ஆக உயர்த்தி, மேலும் அதிக மாணவர்கள் உதவித்தொகை பெற்று பயன் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

1977-78ஆம் ஆண்டு வழங்கிய உதவித்தொகை ரூ. 312.33 லட்சமாகும். 1986-87ம் ஆண்டில் சுமார் 2,90,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ. 377.98 இலட்சம் செலவிடப்பட்டது. இவ்வரசு, கல்விக்குமிக முக்கியத்துவம் தருவதை இவ்வுயர்வு எடுத்துக்காட்டி வருகிறது.

சீர் மரபினர் மாணவர்களுக்காக 2 மேல்நிலைப் பள்ளிகளும், 8 உயர்நிலைப்பள்ளிகளும் 36 நடுநிலைப் பள்ளிகளும் 123 ஆரம்பப் பள்ளிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் மொத்தம் சுமார் 53,000 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளிகளின் பராமரிப்பிற்காக 1986-87ம் ஆண்டு ரூ.210.72 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்குழந்தைகளுக்கு இலவசச் சீருடை வழங்குதல்

கற்பதற்கு கல்வியும், உண்ண உணவும் வழங்குவதோடல்லாமல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு, ஏறத்தாழ 16 கோடி ரூபாய் செலவில், இலவச சீருடை வழங்கும் திட்டத்தை 1985-86 ஆம் கல்வி ஆண்டு முதல், தமிழக அரசு துவங்கி உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 59.43 இலட்சம் மாணவ மாணவியர்கள் பயனடைந்துள்ளார்கள். சீருடை தைக்கும் பணி, மகளிர் தொழிற் கூட்டுறவுச் சங்கங்கள் மகளிர்மன்றம், சேவை நிறுவனங்கள் தொழில் வளர்ச்சித்துறை தையல் தொழிற் கூடங்கள் மற்றும் சமூக நல வாரியத்தைச் சார்ந்த நிறுவனங்கள் ஆகியவைகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்பணியினால், 40,000 மகளிர்க்கு வேலை வாய்ப்புக் கிட்டியது.

ஏழைக் குழந்தைகளுக்கு இலவசப் பாடநூல்கள்

தமிழ்நாட்டில் 65 இலட்சம் மாணவ மாணவிகள் சத்துணவு சாப்பிடுகிறார்கள் இவர்களில் 1வது முதல் 8வது வகுப்புவரை படிக்கும் ஏழை மாணவர்களுக்குத் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் இலவசமாக நோட்டு, புத்தகம் வழங்கி வருகிறது. 1986 ஆம் ஆண்டு ரூ.12 கோடிக்கு இலவசப் பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்குத் தமிழ்ப்புத்தகங்கள் கிடைக்காததால், தமிழ் படிக்க வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தது.

இப்போது அந்தமான், பர்மா, பிஜித்தீவு ஆகிய வெளிநாடுகளுக்கும் இலவசமாகத் தமிழ் புத்தகங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இதில் பிஜி தீவுக்கு மட்டும் ரூ. 85 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் இலவசமாக அனுப்பப் பட்டுள்ளன.

தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் ஆண்டு தோறும் தனது நிதியில் இருந்து, நலிந்து போன பள்ளிக் கூடங்களுக்குக் கூடுதல் கட்டடம் கட்ட ரூ. 25 இலட்சம் இலவசமாக வழங்குகிறது. அது இந்த ஆண்டு முதல், ரூ.50 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆசிரியர்களை மதித்த எம். ஜி.ஆர்

ஆசிரியர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில், தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் சங்கமும், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியும் தமிழக அரசால் உருவாக்கப்பட்டது.

இதற்கான அறிவிப்பை எம்.ஜி.ஆசின் விருப்பப்படி அப்போதைய அமைச்சர் அரங்க நாயகம் 05.09.1981 அன்று அறிவித்தார்.

3 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கல்வி கற்றுத்தரும் வகையில், அரசு சார்பில் நர்சரி பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பும் இந்த ஆண்டு வெளியிடப்பட்டது.

பெரிய கோவில்களில் தமிழாசிரியர்களை நியமிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

சகவர் சிறுவர் இல்லம் 

இந்தியப் பேரரசின் கல்வியமைச்சக நேரடிப் பார்வையில் 1956-ஆம் ஆண்டு புதுதில்லியில் தொடங்கப்பட்ட அமைப்பு சவகர் சிறுவர் இல்லமாகும் 5 முதல் 16 அகவைக்குட்பட்ட சிறுவர்களை கலை வல்லுநர்களாக வளர்ப்பதே இவ்வமைப்பின் நோக்கமாகும்.

தமிழகத்தில் 1974 ஆம் ஆண்டு முதல், சவகர் சிறுவர் இல்லம் நேரு நினைவு நிதியிலிருந்து 16 லட்சம் ஒதுக்கியதன் காரணமாக இராஜாஜி வளாகத்தில் இயங்கி வருகிறது.

இதில் 400 சிறுவர்கள் பயிற்சி பெறுகின்றனர். திருச்சியிலும் புதுக்கோட்டையிலும் இதன் கிளைகள் இயங்கி வருகின்றன.

மதுரை காந்தி நினைவில்லத்திலும் கிளை ஒன்று அமைக்கப்பட்டது.

ராக்கிங்

கல்லூரிகளில் ‘ராக்கிங்’ செய்யும் பழைய மாணவர்களின் விளையாட்டு, கொடூர வன்முறைகளாக மாறி புதிய மாணவர்கள் பல மோசமாக பாதிக்கப்பட்டதால் இந்த ராக்கிங் முறையை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கை பெற்றோர்கள் மத்தியில் எழுந்தது.

இதனால் ராக்கிங் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க எம்.ஜி.ஆர். அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

-சைதை சா.துரைசாமியின் ‘புரட்சித் தலைவரின் பொற்கால ஆட்சி சாதனைகள்’ நூலிலிருந்து…

You might also like