“அரசியலுக்கு அழைத்து என்னை வேதனைப்படுத்த வேண்டாம்”

கடந்த மாதம் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிவிப்பில், ‘தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும், கட்சி தொடங்க மாட்டேன்’ என்றும் அறிவித்திருந்தார்.

இது ரஜினி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது வீட்டு முன்பு போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் ரஜினி ரசிகர்கள் நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரஜினிகாந்த் தனது முடிவை மறுபரிசீலனை செய்து அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி ரசிகர்கள் போராட்டத்தில் முழக்கமிட்டனர்.

இதனிடையே ரஜினிகாந்த், “தன்னை அரசியலுக்கு அழைத்து வேதனைப்படுத்த வேண்டாம்” என்று கூறி இன்று உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர் பெருமக்களுக்கு… நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று, ரஜினி மக்கள் மன்றப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட சிலரும், மன்றத்திலிருந்தும் நீக்கப்பட்ட சிலரும் சேர்ந்து, சென்னையில் ஓர் நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள்.

கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள். இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனை அளிக்கிறது.

தலைமையின் வேண்டுகோளை ஏற்று, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மக்கள் மன்றத்தினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.

நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன். நான் என் முடிவைக் கூறிவிட்டேன்.

தயவு கூர்ந்து இதற்குப் பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று யாரும் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

11.01.2021 – 05.06  P.M

You might also like