கடந்த தேர்தலைவிட அதிகமாக பதிவான வாக்குகள்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபெற்ற 238 வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

வாக்காளர்கள் நீண்டவரிசையில் நின்று வாக்களித்தனர். பதற்றமான பகுதிகளில் துணை ராணுவத்தினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் அமைதியாக நடந்து முடிந்தது.

வாக்குச்சாவடிகளில் வரிசையில் நிற்பவர்கள் வாக்களிக்க டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் மாலை 6 மணிக்குள் வந்த 368 பேர் டோக்கன் பெற்று நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

இதனால் இரவு 9.30 மணி வரை வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 6 மணி நிலவரப்படி 74.69 வாக்குகள் பதிவானதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் கூறினார். 

82,021 ஆண் வாக்காளர்களும், 87,907 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 17 பேரும் வாக்களித்துள்ளனர். மொத்தமாக பதிவான வாக்குகள் 1,69,945.

கடந்த 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 66.23 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. தற்போது 8.46 சதவீதம் கூடுதலாக பதிவாகி உள்ளது.

வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முகவர்கள், வேட்பாளர்கள் முன்னிலையில் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

அந்த பெட்டிகள் ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஏற்றப்பட்டு போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன், ஈரோடு அடுத்த சித்தோடு ஐஆர்டிடி கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான கிருஷ்ணனுண்ணி மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் ஆகியோர் ஆய்வு செய்து அறையை பூட்டி சீல் வைத்தனர்.

அதைத் தொடர்ந்து நேற்று இரவு முதலே 24 மணி நேரமும் சுழற்சி முறையில் 3 அடுக்கு பாதுகாப்பில் துணை ராணுவத்தினரும், போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வீரர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். நாளை மறுதினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

You might also like