விண்ணில் மறைந்த மருத்துவத் தாய்!

பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணரும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் வி.சாந்தா அவர்களின் மறைவு வேதனையைத் தருகிறது. இவரின் மறைவு மருத்துவத் துறைக்கு பேரிழப்பு. தன் வாழ்வை மருத்துவத்திறகு அர்ப்பணித்த தாயே உன்னை வணங்குகிறேன்.

மருத்துவத் தாயின் பயணங்கள்:

டாக்டர்.வி.சாந்தா சென்னை மயிலாப்பூரில் 1927, மார்ச் 11 ஆம் தேதி பிறந்தார். உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் இவரது தாத்தாவின் சகோதரர். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகர் இவரது தாய்மாமா. அவர்களைப் போலவே  சாந்தாவும் இயற்பியல் துறையில் சாதிக்க வேண்டும் என்று குடும்பத்தினர் விரும்பினர். ஆனால் இவரோ மருத்துவத்தில் சாதனை படைக்க விரும்பினார்.

பி.எஸ்.சிவசாமி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்ற சாந்தா, சென்னை மருத்துவக் கல்லூரியில் 1949-ல் டாக்டர் பட்டம் பெற்றார். 1955-ல் எம்.டி. பட்டம் பெற்றார்.

நாட்டின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டியின் முயற்சியால் சென்னை அடையாறில் தொடங்கப்பட்ட மருத்துவமனையில், எம்.டி. பட்டம் பெற்ற உடனேயே மருத்துவராகப் பணியில் சேர்ந்தார்.

கொள்கைப் பிடிப்பும், தொலைநோக்கும், கண்டிப்புடன் வழிநடத்தும் குணமும் கொண்ட டாக்டர்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியை தனது குருவாகப் போற்றுகிறார். 12 படுக்கைகளுடன் இயங்கிவந்த அடையாறு மருத்துவமனையை தனது குருவுடன் சேர்ந்து உலகத் தரம் வாய்ந்த, புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றுவதில் பெரும் பங்காற்றினார்.

தன்னலமற்ற மருத்துவ சேவையால் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை பல சாதனைகளைப் படைத்துள்ளது. 61 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையையே தன் வீடாக மாற்றிக் கொண்டவர். புற்றுநோய் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண், நாயுடம்மா நினைவு விருது, அவ்வையார் விருது, அன்னை தெரசா விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ள சாந்தா, அந்த விருதுகள் மூலம் கிடைக்கும் தொகை முழுவதையும் மருத்துவமனை வளர்ச்சிக்கே செலவு செய்தவர்.

உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்த சாந்தா, இந்திய வேளாண் ஆய்வுக் கழகக் குழுவின் உறுப்பினர், அண்ணா பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர், இந்திய புற்றுநோயியல் கழகத் தலைவர் என பல அமைப்புகளிலும் இணைந்து தனது மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

உலகில் எந்த மூலையில் புற்றுநோய் ஆராய்ச்சி நடந்தாலும், புதிய மருந்துகள், புதிய மருத்துவ முறைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவற்றை உடனடியாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அறிமுகம் செய்வதை விரும்பியவர்.

எளிமை, பணிவு நிறைந்தவர். ஓய்வின்றி வாழ்நாள் முழுவதும் உழைத்தவர் சாந்தா. நோயாளிகளுக்கு உதவுவதுடன் ஆயிரக்கணக்கான மருத்துவர்களுக்கு வழிகாட்டியாகவும் செயலாற்றி வந்துள்ளார்.

“சிறிதும் சுயநலம் கூடாது என்பதையும், பெறுவதைவிட கொடுப்பதே சிறந்தது” என்ற கொள்கையையும் குடும்பத்தினர் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து கற்றதாகக் கூறிவந்த டாக்டர் சாந்தா, இன்று நம்மிடம் இல்லையென்றாலும் அவரது சேவை போற்றுதலுக்குரிய ஒன்றாகும்.

19.01.2021  11 : 10 A.M

You might also like