எங்கே பேரழகு உள்ளதோ, அங்கே பேரழிவும் மறைந்தே இருக்கும் என்பது இதயத்தை கொள்ளை கொள்ளும் இமயமலையை அணிகலனாகக் கொண்ட நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம் (ஆகஸ்ட் 26) நிரூபித்துள்ளது.
ஆனால், இந்தப் பேரழிவுக்கு பேராசை ஆட்சியாளர்களும், கார்ப்பரேட்களும் கைகோர்த்து இயற்கையை சூறையாடியுள்ளதை வசதியாக மறைக்கிறார்கள்;
இந்தியாவின் எல்லைக்கு அருகே இமயமலையை ஒட்டி அமைந்துள்ள அண்டை நாடான நேபாளம் இந்தியாவை பொறுத்தவரை ஒரு ஆன்மீகத் தளமாகும்.
திபெத் எல்லையோரம் அமைந்துள்ள ரசுவா மாவட்டத்தில் பாயும் போதே கோஷி நதியில் திடீரென ஏற்பட்ட ராட்சத பெருவெள்ளம் சுமார் 500 உயிர்களை காவு வாங்கியுள்ளது.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகிப் போயுள்ளனர். இதில் இந்தியாவில் இருந்து கைலாஷ் மானசரோவர் புனித பயணம் மேற்கொண்ட பக்தர்களில் 133 பேரும் அடங்குவர். இதில் தமிழர்கள் 40 க்கு மேற்பட்டோரும் அடங்குவர்.
இமயமலையெங்கும் ஆறுகள் பெருக்கெடுத்து கீழே இறங்குகின்றன.
அந்த வகையில் நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் பாயும் ஆறுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் நீர் மின் நிலையங்கள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவை உள் நாட்டுத் தேவையைக் கடந்து விற்பனை நோக்கத்திற்குமானது என்பது தான் கொடுமை.
நீரோட்டத்தைத் தடுத்த நீர் மின் உற்பத்தி திட்டங்கள்!
தற்போது ஏற்பட்ட கொடிய திடீர் வெள்ளம், மலைப் பகுதிகளில் உருவாக்கப்பட்ட மின் உள்கட்டமைப்பையே சின்னாபின்னப்படுத்தியுள்ளன.
நேபாள எரிசக்தி மற்றும் நீர்வள அமைச்சகத்தின் தகவல்களின்படி, 900 மெகாவாட்டிற்கும் (MW) அதிகமான மின் உற்பத்தித் திட்டங்கள் இந்த பெரு வெள்ளத்தால் உருக்குலைந்துள்ளன.
தற்போதைய வெள்ளத்தால் உற்பத்தியில் இருந்த 12 முக்கிய மின் திட்டங்கள் நீர்மின்சாரம் மற்றும் சூரிய மின்சாரம் உட்பட மொத்தம் 431 மெகாவாட் மின் உற்பத்தி முற்றிலும் முடங்கியுள்ளது.
இந்த நீர் மின்திட்டங்கள் மலையின் உறுதிப்பாட்டை உருகுலைய வைத்தே எழுப்பட்டுள்ளன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வருங்கால வணிக நோக்கங்களுக்காக ஆற்று நீரோட்டங்களைத் தடுத்து கார்ப்பரேட் நிறுவனங்களால் கட்டப்பட்டு வந்த, 390 மெகாவாட் கூட்டுத் திறன் கொண்ட 5 புதிய நீர்மின் திட்டங்கள் இந்த வெள்ளத்தில் தாறுமாறாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
இந்த மின் உற்பத்திக்காக கட்டுமான தளங்களில் இருந்த கனரக இயந்திரங்கள் மற்றும் தற்காலிகப் பாலங்கள்.. என எல்லாவற்றையும் பயனற்றவையாக்கி விட்டது, இயற்கையின் சீற்றம்!
பெரு வணிகமான ஆன்மீகச் சுற்றுலா;
ஆன்மீகச் சுற்றுலாவை பெருவணிகமாக்கி ஆறுகளின் படுகைகளிலும், வெள்ளப் சமவெளிகளிலும் விதிகளை மீறி ரிசார்ட்டுகளும், வணிகக் கட்டிடங்களும் எழுப்பபடுகின்றன.
இதனால் தான் ஆற்று நீர் இயற்கையான நீரோட்டத்தில் இருந்து மாறுபட்டு கட்டுமானங்களை உருக்குலைக்கின்றன.
சுற்றுலா மற்றும் வணிக நோக்கங்களுக்காக நேபாள எல்லையை இணைக்கும் 19 பாலங்களும் அழகிய மலைகளைக் குடைந்து போடப்பட்ட சாலைகளையும் இயற்கை ஏற்க மறுத்துள்ளதை இந்த நிலச்சரிவும்,வெள்ளப் பெருக்கும் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன.
சுரங்கப் பாதைகள் மற்றும் சாலைகளை உருவாக்கும் நோக்கத்திற்காக இமயமலைப் பாறைகள் வெடிவைத்துத் தகர்க்கப்படுகின்றன.
இப்படியாக இயற்கையின் மீதான மனித ஊடுருவலே மலையை பலம் இழக்கச் செய்து, நிலச்சரிவுகளுக்கு காரணமாகின்றது.
இந்த இயற்கை எந்த அளவுக்கு வணிக நோக்கங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதற்கு எல்லையோர சாலைகளில் ஓடிக் கொண்டிருந்த 200-க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் டிரக்குகளின் நடமாட்டங்களே சாட்சி. அவை அனைத்தையும் இயற்கை தூக்கி எறிந்துள்ளது.
அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்டுள்ள தகவல்களின்படி நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட இந்த வரலாறு காணாத பேரழிவிற்கு இயற்கையான காலநிலை மாற்றத்தோடு, செல்வாக்கான மனிதர்களின் பேராசையும் காரணமாகின்றன.
கார்ப்பரேட்களின் நாசகாரத் திட்டங்களின் விளைவே சுற்றுச்சூழல் அழிவுக்கு காரணமாகி இந்த பெருவெள்ளத்தின் தாக்கத்தை பேரழிவாக்கிவிட்டுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.
சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்கள் உருவாக்கும் வெப்ப வெளிப்பாடுகளால் புவி வெப்பமயமாகிறது. இதில் இமயமலையின் பனிப்பாறைகள் தொடர்ந்து உருகி வருகின்றன.
தற்போது ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்திற்கு, இமயமலையின் லாங்டாங் லிரங் (Langtang Lirung) சிகரத்தின் வடக்குப் பகுதியின் மிகப்பெரும் பனிப்பாறை பாறைகளின் சரிவே பிரதானக் காரணம் என்று செயற்கைக்கோள் படங்களால் தெரிய வந்துள்ளது.
இயற்கை பேரிழிவுகளுக்கு காலநிலை மாற்றம் மட்டும் காரணமல்ல, இயற்கையை அழித்து செய்யப்படும் கார்ப்பரேட் நிறுவனங்களின் திட்டமிடப்படாத உள்கட்டமைப்பு மற்றும் மலையளிப்பு நடவடிக்கைகளுமே பிரதான காரணமாகும்.
பேரழிவை உருவாக்கியது, பேராசைத் திட்டங்களே!
– சாவித்திரி கண்ணன்
- நன்றி – அறம் இதழ்