மின்சார வசதி கூட இல்லாத கிராமத்தில் தொடங்கிய விண்வெளிப் பயணம்!

“வகுப்பு ஆரம்பிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக மாட்டு சாணத்தை அள்ளிப் போட்டு, படிக்கச் செல்வேன்”

– இப்படியாக பயணம் தொடங்கி நிலவிற்கு சென்ற விண்வெளி ஆராய்ச்சியாளர் மயில்சாமி அண்ணாதுரையின் நிஜ வாழ்க்கை முதல் நிலவு வாழ்க்கை வரையிலுமான தொகுப்பு.

தமிழகத்தை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் மயில்சாமி அண்ணாதுரை கடந்த 1958-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி கோவை மாவட்டத்தில் கோதவாடி என்ற கிராமத்தில் பிறந்தார்.

பள்ளிக் கல்வியின் பாடங்களை மரத்தடியிலும், கோயில்களின் திண்ணைகளிலும், மாற்றியமைக்கப்பட்ட மாட்டு கொட்டகைகளிலுமே பயின்றார்.

தினமும் வகுப்பு தொடங்கும் சிறிது நேரத்திற்கு முன்பு வரை மாட்டு சாணத்தை அள்ளி கொட்டி கொண்டிருப்பாராம்.

வீட்டில் உள்ள இந்த வேலைகளை எல்லாம் முடித்து விட்டு ஓடோடி பள்ளிக்கு செல்வாராம்.

இப்படிப்பட்ட வாழ்க்கை சூழலைக் கொண்டிருந்த மயில்சாமி எப்படி இந்திய விண்வெளித்துறையின் முக்கிய விஞ்ஞானியாக உயர்ந்தார்?

தனது இளமைக் காலத்தில் காலணிகூட இல்லாமல் வலம் வந்த மயில்சாமி எட்டு வயதை அடையும்போதுதான் அவரது கிராமத்திற்கு மின்சாரம் வசதி கிடைத்துள்ளது.

ஆனால், அதே காலக்கட்டத்தில், 1960களில் அமெரிக்காவும் அதன் முக்கிய போட்டியாளருமான ரஷ்யாவும் விண்வெளிக்கு ராக்கெட்டுகளை அனுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தன.

அச்சமயத்தில், விண்வெளி ஆராய்ச்சி அமைப்பும் தனது முதல் செயற்கைக்கோளை 1963-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி விண்வெளியில் செலுத்தியிருந்தது.

ஆனால், அது இந்தியர்களின் வாழ்க்கையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோதவாடி எனும் கிராமத்தில் பிறந்து, வளர்ந்த மயில்சாமி உள்பட அந்த காலக்கட்டத்தில் வாழ்ந்த இந்தியர்களுக்கு போதுமான கல்வியும், சுகாதார வசதியும் கிடைக்கவில்லை

கல்வியில் வல்லவர்:

குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை, மயில்சாமியின் படிப்பு திறனை எவ்வகையிலும் மட்டுப்படுத்தவில்லை.

பொதுவாகவே, அறிவியலிலும், கணிதத்திலும் மிகுந்த ஆர்வத்தோடு திகழ்ந்த மயில்சாமிக்கு வரலாறு பாடம் மட்டும் பிடித்திருக்கவில்லை.

பள்ளி ஆசிரியராக பணியாற்றிய மயில்சாமியின் தந்தையின் வருமானம் குடும்பத்தின் தேவைக்கு போதுமானதாக இருந்தது.

இச்சூழ்நிலையில், மயில்சாமி பள்ளிக்கல்வியை முடித்த பிறகு, மேற்கல்வியை பயில்வார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

அப்படிப்பட்ட நேரத்தில், அரசின் உதவித்தொகை ஒன்று கிடைத்துள்ளது.

மேல்நிலை கல்வியில் மாநில அளவில் 39-வது இடத்தை பிடித்த மயில்சாமி, மாவட்ட அளவில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார்.

மயில்சாமி அண்ணாதுரை தனது மேல்நிலை கல்வியை முடித்துவிட்டு, பொறியியல் படிப்பில் சேர்ந்த அதே சமயத்தில், 1975-ம் ஆண்டு ரஷ்யாவின் உதவியுடன் இந்தியா ஆர்யபட்டாவை விண்ணில் செலுத்தியது.

ஆர்யபட்டாவிலிருந்து சிக்கனல்களை பெறுவதற்காக அவசர அவசரமாக பெங்களூரிலுள்ள விண்வெளி மையத்தின் கழிவறைகள் தரவு மேலாண்மை மையங்களாக மாற்றப்பட்டன.

ஆறு மாதங்கள் வரை செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் வெறும் நான்கு நாட்களே செயல்பட்டது.

அடுத்த நான்காண்டுகளுக்கு பிறகு, முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ராக்கெட்டும் தோல்வியடைந்தது.

1980களின் தொடக்கத்தில் மயில்சாமி இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார். அப்போது, இஸ்ரோ முன்னரே வகுத்திருந்த திட்டத்தின்படி, நான்காண்டுகளுக்கு ஒரு முறையே செயற்கைகோள்களை ஏவி வந்தது.

அவருக்கு அப்போது ஆங்கிலம் கூட தெரியாததால் பலரும் அவரை கேலி, கிண்டல் செய்து வந்துள்ளனர்.

பூமிக்கு மேலே 400 கி.மீ. சுற்றுவட்ட பாதையில் வலம் வரும் செயற்கைக்கோளை வடிவமைப்பதே இவர் பணியாற்றிய முதல் திட்டம் ஆகும். ஆனால், விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் வங்காள விரிகுடாவில் சரிந்து விழுந்தது.

நிலவை நோக்கி…

மயில்சாமியின் தொடக்க காலம் தோல்வியை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், அதற்கடுத்து இந்தியாவின் வானிலை கண்காணிப்பு, ஒளிபரப்பு முதல் இயற்கை வள மேலாண்மை வரையிலான பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்ட எட்டு இன்சாட் செயற்கைக்கோள்களை உருவாக்கிய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார்.

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா ஏற்படுத்திய சந்திரயான்- 1 திட்டத்தின் திட்ட இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரை 2004-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மழைமேகங்கள் சூழ்ந்திருந்த ஒரு நாளில் சந்திரயான் – 1 விண்கலம் விண்ணை நோக்கி சீறிப் பாய்ந்தது.

இந்தியாவின் தேசியக் கொடியை நிலவில் நிறுத்திய அது, நிலவில் தண்ணீர் இருப்பதையும் உறுதி செய்தது.

ஒருபுறம் சந்திரயான்-1இன் வெற்றியை இந்திய ஊடகங்கள் கொண்டாடினாலும், மறுபுறம் கோடிக்கணக்கான இந்தியர்கள் வறுமையில் வாடி வரும் நிலையில் இது தேவையா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

ஆனால், இதுகுறித்து மயில்சாமி “தொழிற்புரட்சியில் ஒட்டுமொத்த நாடும் பங்கேற்காததே தற்போது நிலவும் வறுமைக்கு முக்கிய காரணம்.

இவ்வளவு பெரிய மக்கள் தொகையை கொண்டுள்ள நாடு, விண்வெளித்துறையில் கால்தடம் பதிப்பதற்குரிய வாய்ப்புகளை அப்படியே விட்டுவிட முடியாது என கூறியுள்ளார்.

செவ்வாய் கிரக ஆராய்ச்சி:

அடுத்த சில ஆண்டுகளுக்கு பிறகு, இவரது தலைமையிலான குழுவே, செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் தனது முதல் முயற்சிலேயே வெற்றிபெற்ற முதல் நாடாக இந்தியா உருவெடுப்பதற்கு காரணமாக அமைந்தது.

“நிலவை நோக்கிய பயணத்தில், செயற்கைகோள் நொடிக்கு 1 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் செல்ல வேண்டிருந்த நிலையில், செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு நொடிக்கும் 30 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் செயற்கைக்கோளை தயாரிக்க வேண்டியிருந்தது.

இதை சாத்தியமாக்குவதற்கு எண்ணிலடங்கா திட்டமும், நேரமும் தேவைப்பட்டது.”

சந்திரயான் – 1ஐ ஏவிய 11 ஆண்டுகளுக்கு பிறகு, சந்திரயான் – 2ஐ அடுத்த மாதம் 15-ம் தேதி விண்ணில் ஏவ உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய மேதை:

இஸ்ரோவில் தான் பணியாற்றும்போதே சந்திரயான் – 2 விண்ணினில் ஏவப்படுவதை காண வேண்டுமென்று மயில்சாமி அண்ணாதுரை விரும்பினார்.

இருப்பினும், அது நிறைவேறாமலே கடந்த ஆண்டு ஜூலை மாத இறுதியில் பணி ஓய்வு பெற்றுவிட்டார்.

விண்வெளியை எவ்வித பிரச்சனையும் இன்றி அமைதியாக காப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் சார்பாக உருவாக்கப்பட்ட குழுவொன்றின் தலைவராக மயில்சாமி விளங்கினார்.

இந்திய நாட்டின் உயரிய உரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ உள்பட பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விருதுகளை வென்றுள்ளார்.

தனது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அடித்தளமிட்ட சொந்த கிராமத்திற்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக கொண்டுள்ள இவர், தனது பள்ளிக்கூடத்தை சீரமைப்பதற்கும் நிதி திரட்டி கொடுத்துள்ளார்.

இஸ்ரோவிலிருந்து பணி ஓய்வு பெற்றதும், எவ்வித ஆடம்பரமும் இல்லாமல் சாதாரண வாழ்க்கையை தற்போது வாழ்ந்து வருகிறார்.

மயில்சாமி தனது பள்ளிக்காலத்தில் வரலாறு பாடத்தை விரும்பாமல் இருந்திருக்கலாம்.

ஆனால், அவரது வாழ்க்கைப் பயணத்தை தற்போது தமிழ்நாட்டிலுள்ள மாணவர்கள் வரலாறு பாடமாக படித்து வருகிறார்கள்.

இதுவே உலகின் சாதனை. இதவிட ஒரு மனிதருக்கு உலகின் என்ன சந்தோஷம் கிடைத்து விடப்போகிறது.

புகழின் உச்சத்திற்கு சென்றாலும், மனித வாழ்க்கை இதுதான் என மக்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வரும் மயில்சாமி அண்ணாதுரை இளைஞர்களுக்கு பெரிய வழிகாட்டியாகவே திகழ்வார்!

– அனுப்ரியம் குமரேசன்

நன்றி : ஐபிசி தமிழ்நாடு 

Comments (0)
Add Comment