வெயில் காலம் தொடங்கியுள்ளதால் அம்மை உள்ளிட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
தற்போது தேர்வு நேரமாக இருப்பதால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அம்மை நோயிலிருந்து தப்பித்துக் கொள்ள முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.
அப்படி வெயில் நோய்கள் வராமல் பாதுகாக்க செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணாவின் விளக்கம் இதோ.
“பொதுவாக பருவமழை காலத்தைத் தொடர்ந்து ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்கள் குளிர்காலங்களாகும். மார்ச் மாதம் இறுதி நாளில் கோடை வெயில் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும்.
ஆனால் நடப்பாண்டில் கோடை வெயிலின் தாக்கம் அக்னி நட்சத்திற்கு இணையாக சுட்டெரிக்கத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக உடலில் ஏற்படும் மாறுதல்களால் பலருக்கு அம்மை நோய் தாக்க வழியுள்ளது.
அம்மை நோய் வருவதற்கு முன்பே காய்ச்சல், தலைவலி, உடல் வலியால் அவதிப்படுவர். அதன் பின்னர்தான் அம்மை போட்டிருப்பது நம் கண்ணுக்குத் தெரியும்.
அம்மை நோயானது ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்பட்டால், தொடர்ந்து அந்த குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் எளிதில் தொற்றிக் கொள்ளும்.
இது வைரஸ் கிருமிகளால் ஏற்படக்கூடியது என்பதால் சுலபமாக காற்றிலேயே மற்றவர்களுக்கு பரவும் தன்மை கொண்டது.
மாணவர்களுக்கு தற்போது தேர்வு நேரமாக இருப்பதால் அம்மை நோயிலிருந்து தப்பித்துக் கொள்ள முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.
அதிகளவு தண்ணீர் அருந்துவது, தண்ணீர் சத்து அதிகமுள்ள காய்கறி, கனிகளை அதிகளவில் உட்கொள்ள வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாக்க குளிர்ச்சியான பழம் மற்றும் சத்து, ஆரோக்கியமான உணவுகள் ஆகியவற்றை வழக்கத்தை விட வழங்குவதுடன் கட்டாயப்படுத்தி சாப்பிட வலியுறுத்துவதன் மூலம் அம்மை நோய்க்கு எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன் எளிதில் அம்மை நோய் வராமல் பார்த்துக்கொள்ள முடியும்.
பொதுவாக வைரஸ் என்னும் அதிகளவு கிருமிகளால் பாதிக்காத வகையில் அம்மை நோயைக் கட்டுப்படுத்த தற்போது சிகிச்சை அளிக்க முடியும்.
அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்கள் வைட்டமின்கள் அதிகமுள்ள உணவை சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் சத்தான இளநீர், கரும்பு சாறு, பதநீர், பழசாறு, குளிர்ச்சியான உணவு வகைகள், கேப்பைக் கூழ், கம்பங்கூழ், எளிதில் ஜீரணமாக கூடிய உணவு வகைகளை அதிகம் குடிக்க வேண்டும்.
இவைகளை முறையாக கடைபிடித்தாலே அம்மை நோய் சரியாகி விடும்.
– நன்றி: மாலை மலர்